திமுகவில் இணைய வாய்ப்பில்லை... மதுரையில் ஆதரவாளர்களுடன் ஜன. 3ல் ஆலோசனை - மு.க.அழகிரி
திமுக உடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை என்று மு.க அழகிரி கூறியுள்ளார்.
சென்னை: திமுக தலைமையிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்றும் திமுக உடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை என்றும் மு.க அழகிரி கூறியுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் ஜனவரி 3ஆம் தேதி மதுரையில் ஆலோசனை நடத்திய பின்னர் அரசியல் நிலைபாடு பற்றி அறிவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில் அனைத்து கட்சித்தலைவரும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதிமுக, திமுக, மட்டுமல்லாது புதிதாக கட்சி ஆரம்பித்த கமல்ஹாசனும் மக்களிடம் வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டனர்.
மிசன் 200 இலக்குடன் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது திமுக. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிரணியின் கனிமொழி ஆகியோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மு.க அழகிரி
திமுகவில் இருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகாலமாக மதுரையில் மையம் கொண்டிருக்கும் மு.க. அழகிரி திடீரென இன்று சென்னை கோபாலபுரத்திற்கு வந்திருந்தார். தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து விசாரித்த மு.க. அழகிரி நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார்.
இணைய வாய்ப்பில்லை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரி சட்டசபைத் தேர்தலில் தனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று கூறினார். வாக்களிப்பது கூட பங்களிப்புதான் என்று தெரிவித்தார். திமுக உடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர், திமுக உடன் இணைய வாய்ப்பு இல்லை என்று கூறினார். திமுக தலைமையிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்று தெரிவித்தார்.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை
ஜனவரி 3ஆம் தேதியன்று மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்போவதாகவும், அவர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார் மு.க அழகிரி. புதிய கட்சி தொடங்குவீர்களா என்று கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனவரி 3ஆம் தேதி ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
திமுக தலைவர்
திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்த போதே கட்சியை விட்டு நீக்கப்பட்டார் மு.க. அழகிரி. உறவினர்களின் சமாதான முயற்சி எதுவுமே ஏற்கப்படவில்லை. கருணாநிதி மறைவுக்கு பிறகு அக்கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அப்போது கூட தனது தலைவர் கருணாநிதி மட்டுமே என்று கூறியிருந்தார் அழகிரி.
2021 சட்டசபைத் தேர்தல்
கடந்த சில ஆண்டு காலமாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் இருந்த அழகிரி சட்டசபைத் தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்று அறிவித்திருந்தார் இந்த நிலையில் இன்று திடீரென சென்னை கோபாலபுரத்திற்கு வந்து தயாளு அம்மாவை சந்தித்தது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.