வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள்... திமுக எம்.எல்.ஏ.களுக்கு ஸ்டாலின் அன்புக்கட்டளை
சென்னை: திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவரவர் தொகுதிகளில் கல்வி மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் அமைக்க அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவரும் நிலையில், சுயதொழில் தொடங்குவது பற்றி இந்த பயிற்சி மையங்கள் மூலம் இளைஞர்களுக்கு விளக்கப்படவுள்ளன.
திமுக எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் தோறும் தொழில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கவலை
இளைஞர்களுக்கும், பட்டதாரிகளுக்கும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் திமுக எம்.எல்.ஏ.கள் தொழில் பயிற்சி மையங்கள் அமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். சென்னையில் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நீட், ஐ.ஏ.எஸ். உள்ளீட்ட கல்வி பயிற்சி மையங்களை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

பயிற்சி மையம்
அதன் நீட்சியாக தமிழகம் முழுவதும் உள்ள திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், தங்கள் தொகுதிகளில் இலவச கல்வி மற்றும் தொழிற் பயிற்சி மையங்களை அமைக்க உள்ளனர். இதற்கான முழு செலவையும் அவர்களே ஏற்று நடத்தவுள்ளனர்.

சேவை
திமுக எம்.எல்.ஏக்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இலவச பயிற்சி மையங்களை தொடங்குவார்கள் என்று நேற்று சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே அறிவிக்கவும் செய்தார். இந்த அறிவிப்பை கேட்டு பொங்கல் விழாவில் கலந்துகொண்ட மாணவிகள் நீண்ட நேரம் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திறப்புவிழா
இதனிடையே அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களும் இலவச பயிற்சி மையங்களை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சிலர் இடம் கூட தேர்வு செய்துவிட்டனர். மு.க.ஸ்டாலினை வைத்து அந்த பயிற்சி மையங்களை திறந்து வைக்க திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications