பெரியார் சிலை அவமதிப்பு-மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்து கொள்வர்? ஸ்டாலின்
சென்னை: திருச்சியில் காவிச் சாயம் பூசி பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. சிலை மீது காவி வர்ணம் ஊற்றியுள்ளனர். இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?
திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்! பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்! என்றார் ஸ்டாலின்.

அது போல் திமுக எம்பி கனிமொழியும் பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், "பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை" என்றார்.


இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும்.. மரியாதையா ? நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா? என கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் தந்தை பெரியார் சிலை காவி வண்ணம் பூசி அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
மறைந்த தலைவர்களின் சிலைகளை இப்படி தொடர்ந்து அவமரியாதை செய்வதை ஏற்க முடியாது. சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் #காவிநோய்: தந்தை பெரியாருக்கு எதிராகவும் திராவிட அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து வெறுப்பு அரசியலைப் பரப்பிவரும் #சாதியவாத_மதவாத_பழமைவாத_இனவாத_தூய்மைவாத_மூடநம்பிக்கைவாதக் கும்பல் இத்தகைய அநாகரிகமான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் கேவலத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications