செப்டம்பர் 9-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்... புதிய பொதுச்செயலாளர்... பொருளாளர் தேர்வு
சென்னை: செப்டம்பர் 9-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு பிறகு திமுகவில் காலியாக உள்ள பொதுச்செயலாளர் பதவிக்கு அன்றைய தினமே புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
திமுக வரலாற்றில் முதல்முறையாக காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் பொதுக்குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்குக - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக பொதுக்குழு
கடந்த மார்ச் 29-ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் தேதி குறிப்பிடபடாமல் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 9-ம் தேதி அந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், வரும் 9-ம் தேதியன்று காலை 10 மணிக்கு தனது தலைமையில் காணொலிக் காட்சி மூலம் பொதுக்குழு நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாளர்
பேராசிரியர் அன்பழகன் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி மறைந்ததை அடுத்து அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவி இன்னும் காலியாக உள்ளது. அந்தப் பதவிக்கு செப்டம்பர் 9-ம் தேதியன்று துரைமுருகன் தேர்ந்தெடுக்கடுப்பட உள்ளார். இதையடுத்து அவர் வகித்து வரும் பொருளாளர் பதவிக்கும் அன்றைய தினமே டி.ஆர்.பாலு அல்லது எ.வ.வேலு ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
வரலாற்றில் முதல்முறை
திமுக வரலாற்றில் முதல்முறையாக காணொலிக் காட்சி மூலம் பொதுக்குழு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பிரத்யேக கடவுச்சொல் (Password)வழங்கும் பணியில் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் தகவல் தொழில்நுட்ப குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
செப்டம்பர் 3-ம் தேதி
இதனிடையே நாளை மறுதினம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.