சந்திரசேகர ராவின் துணை பிரதமர் கனவு, பாஜக ஆதரவு- அத்தனைக்கும் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை!
Recommended Video
சென்னை: துணை பிரதமர் கனவு மற்றும் பாஜக ஆதரவு என அத்தனை முயற்சிகளுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கிடைக்காததால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏமாற்றம் அடைந்துள்ளாராம்.
மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மமதா பானர்ஜி, மாயாவதி ஆகியோர் மும்முரமாக இருந்து வருகின்றனர். மேற்கு வங்கத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றினால் இருவரும் கிங் மேக்கர்களாக உருவெடுப்பர்.
அதனால்தான் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கின்றனர். தென்மாநிலங்களில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திமுக. பிஜூ ஜனதா தளம் ஆகியவை கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதனால் தென்மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து தமக்கான முக்கியத்துவத்தை உருவாக்கிக் கொள்வதில் முனைப்பு காட்டுகிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

சிக்னல் தராத திமுக
ஆனால் சந்திரசேகர ராவ், பாஜகவுடன் மென்மைப் போக்கை கடைபிடிக்கக் கூடியவர் என்பது அப்பட்டமான ஒன்று. இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மட்டும்தான் சந்திரசேகர ராவுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தது. திமுகவிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை.

துணை பிரதமர் கனவு
இதையடுத்துதான் மீண்டும் மீண்டும் சென்னைக்கு கஜினி முகமதுவைப் போல படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார் சந்திரசேகராவ். அவரைப் பொறுத்தவரையில் தென் மாநில எம்.பிக்கள் தம் வசம் என்கிற சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் எப்படியும் துணை பிரதமர் பதவியை வாங்கிவிடலாம் என்பதுதான் திட்டம். இதனால்தான் மாநில உரிமைகள் நலன் என்கிற முழக்கங்களை பேசிவருகிறார் சந்திரசேக ராவ்.

பாஜக அணிக்கு திமுகவை இழுக்கும் திட்டம்
தமக்கான துணை பிரதமர் பதவி என்பது பாஜக ஆட்சி அமைத்தால்தான் கிடைக்கும் என்பதும் சந்திரசேகர ராவின் கருத்து. இதற்காகவே திமுகவை வளைப்பதில் தீவிரமாக முயற்சித்து வருகிறார் ராவ்.

ஏமாந்த கேசிஆர்
திமுகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்தான் நீடிப்பது என முடிவு செய்திருக்கிறது. இதையேதான் சென்னையில் நேற்று தம்மை சந்தித்த சந்திரசேகர ராவிடமும் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அத்துடன் காங்கிரஸ் அணிக்கு வந்துவிடுங்கள் எனவும் ராவிடம் கூறியிருக்கிறார் ஸ்டாலின். இப்படி தமது துணை பிரதமர் கனவு, பாஜக ஆதரவு நிலை என அத்தனைக்கும் மு.க.ஸ்டாலின் பிடிகொடுக்காமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறாரே என ஆதங்கப்பட்டுள்ளாராம் சந்திரசேகர ராவ்.












Click it and Unblock the Notifications