Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரழிவு ஏற்படும்.. தமிழகத்தை சகாரா பாலைவனமாக்க திட்டமிடுகிறதா மத்திய அரசு.. ஸ்டாலின் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளாண்மையை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டிவிட மத்திய பாஜக அரசு முடிவு செய்து விட்டதா என்ற அச்சம் மக்களிடம் நிலவுவதாகவும், தமிழகத்தைச் சகாரா பாலைவனமாக்கும் விதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குத் தொடர்ந்து அனுமதியளிக்கும் முடிவினை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:, "தமிழ்நாட்டில் மேலும் 104 ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதற்கு, அதனால் ஏற்படப் போகும் பேரழிவை எண்ணிப் பார்த்து, திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15, திருவாரூரில் 59, தஞ்சாவூரில் 17, அரியலூரில் 3, கடலூரில் 7, ராமநாதபுரத்தில் 3 என்று மொத்தம் 104 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைத்து வேளாண்மையை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டிவிட மத்திய பாஜக அரசு முடிவு செய்து விட்டதா என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது."விவசாயிகள் நலனுக்காகத் திட்டங்கள் தீட்டுகிறோம்" என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, அது வெளிப் பூச்சுக்குத்தான் என்று நிரூபிக்கும் வகையில், மறுபுறம் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் வயிற்றில் கொடூரமாக அடிக்கும் திட்டங்களுக்கு, "திட்டமிட்டு" கெட்ட நோக்குடன் அனுமதி கொடுப்பது கடும் கண்டத்திற்குரியது.

ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா

ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா

காவிரிப் படுகையில் ஏற்கெவே 341 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க 18,650 கோடி ரூபாய் முதலீட்டில் அனுமதி பெற்றுள்ள ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் வேளாண் மண்டலத்தையே சிதைத்து- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, தமிழகத்தின் பொருளாதாரத்தை அடியோடு பிடுங்கியெறியும் விதத்தில் இப்படித் தொடர்ந்து ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி கேட்பது மிகுந்த கவலையளிக்கிறது.

அழைத்துப் பேசாத முதல்வர்

அழைத்துப் பேசாத முதல்வர்

ஹைட்ரோகார்பன் திட்டங்களால் தங்களுக்கு உள்ள பேராபத்தை "நெடுவாசல் போராட்டம்", "கதிராமங்கலம் போராட்டம்", "நாகை, திருவாரூர் போராட்டம்", "விழுப்புரம் முதல் ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டருக்கு எழுச்சிமிகு மனித சங்கிலிப் போராட்டம்" எல்லாம் நடத்தி -தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரோ, மாநிலத்தில் உள்ள முதல்வரோ அந்த மக்களை- விவசாயிகளை அழைத்துப் பேசிட முன்வரவில்லை.

வாக்குறுதி என்ன ஆனது

வாக்குறுதி என்ன ஆனது

உண்மையான ஜனநாயக உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்க மத்திய பாஜக அரசு தயாராக இல்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. "தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நிறைவேற்றப்படாது" என்று வாக்குறுதி அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், இப்போது இந்த அனுமதிகளை வழங்குவது ஏன் ?"மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்" என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரவமற்றுக் கிடப்பது ஏன்? அடக்குமுறை சட்டங்களை ஏவி- விவசாயிகளின் உரிமைக்குரலை அடக்கி ஒடுக்கி முறித்துப் போட்டுவிடலாம் என்பதில் மட்டுமே முதல்வர் பழனிசாமி ஆர்வமும் அதிக கவனமும் செலுத்தி- விவசாயிகளின் நலனை முற்றிலும் புறக்கணிப்பது கடும் கண்டத்திற்குரியது.

காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையம்

இது ஒருபுறமிருக்க காவிரி மேலாண்மை ஆணையம் "தபால் அலுவலகம்" போல் செயல்படும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. "சட்டப் போராட்டம் மூலம் சகல அதிகாரமும் உள்ள ஆணையம் அமைத்து விட்டோம்" என்று தம்பட்டம் அடித்த அதிமுக அரசு, இன்றைக்கு அந்த ஆணையம் போட்ட முதல் உத்தரவையே அவமதித்துள்ள கர்நாடக அரசை தட்டிக் கேட்க முடியாமலும், மத்திய பாஜக அரசிடம் வலியுறுத்தத் துணிச்சல் இல்லாமலும் அஞ்சி- தமிழக விவசாயிகளைக் கடுமையாக வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
இதன் விளைவாக, ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி நீரும் திறந்து விடப்படவில்லை. இப்போது இரண்டாவதாக ஜூலை மாதத்திற்கான தண்ணீரைத் திறந்து விடுங்கள் என்று போட்ட உத்தரவின்பேரில் 31.24 டிஎம்சி நீரும் திறக்கப்படவில்லை.

காவிரி மேலாண்மை உத்தரவு

காவிரி மேலாண்மை உத்தரவு

"காவிரியில் நீர்வரத்து இருந்தால் ஜூன், ஜூலை மாத தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுங்கள்" என்று காவிரி மேலாண்மை ஆணையம் போட்டிருக்கும் இரண்டாவது உத்தரவு உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மீறிய செயல் மட்டுமல்ல- பல் இல்லாத ஆணையம் பவர் இழந்து,கோலூன்றிக் குனிந்து நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. பொறுப்புத் தலைவரின் கீழ் செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்திடமிருந்து இதை விட அதிகமாக தமிழக விவசாயிகள் எதிர்பார்க்க முடியாத கீழ்மை நிலைமை ஏற்பட்டிருக்கிறது.ஆகவே, காவிரி ஆணையத்திற்கு உடனடியாக நிரந்தரத் தலைவர் நியமிக்கவும், இதுவரை ஆணையம் போட்டுள்ள இரு உத்தரவுகளின் அடிப்படையில் 40.43 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்து விட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஹைட்ரோகார்பன் திட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டம்

தமிழகத்தைச் சகாரா பாலைவனமாக்கும் விதத்தில், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குத் தொடர்ந்து அனுமதியளிக்கும் முடிவினை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட்டு, மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மக்களையும், விவசாயிகளையும், வேளாண்மையையும் போற்றி நாட்டின் நலனை வளர்த்தெடுக்க வேண்டும்", இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+