ஸ்ட்ரையிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. "ஜெர்க்" ஆகும் பாஜக.. 30 நாளில் அடுத்தடுத்து அதிரடி
சென்னை: கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இரு காலாண்டுகளுக்கு கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை இணைந்து வலியுறுத்த வேண்டும் என்று 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி, மத்திய அரசின் ஒட்டுமொத்த கவனத்தையும் இந்த பக்கமாக இழுத்துள்ளார்.
Recommended Video
மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு அணி திரட்டுவது இது முதல் முறை கிடையாது. பதவியேற்ற 30 நாட்களில் பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்துள்ளது திமுக அரசு.

30 நாட்கள் அதிரடி
மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைக்க ஆரம்பித்தது, ஜிஎஸ்டி முதல் வாக்சின் ஒதுக்கீடு வரை பல விவகாரங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தது, மாநில வளர்ச்சி கொள்கை கமிட்டி துணை தலைவராக மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் ஜெயரஞ்சனை நியமித்தது, மத்திய அரசு போதிய வாக்சின் தரவில்லை என்று தடுப்பூசி முகாம்களை நிறுத்துவதாக அறிவித்தது, நீட் தேர்வின் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது, என வரிசையாக மத்திய அரசை ஜெர்க் அடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. அதுவும் முப்பதே நாட்களில்.

ஒன்றிய அரசு
ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் யூனியன் கவர்ன்மென்ட் என்பதின் தமிழாக்கம்தான் என்றபோதிலும், பாஜக தலைவர்கள் பலருக்கும் இது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இதுகுறித்து கூறுகையில், ஒன்றிய அரசு என அழைப்பது திமுகவின் குழந்தைத்தனமான செயல் என்று கூறி கண்டனம் தெரிவித்ததார்.

எல்.முருகன் விமர்சனம்
நீட் தேர்வு குறித்து கமிட்டி அமைக்கப்பதற்கு பாஜக தமிழக தலைவர் முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தேவையற்றது, ஈகோ பிடித்த செயல் என்றெல்லாம் வர்ணித்துள்ளார் எல்.முருகன். மத்திய அரசுடன் இணக்கமாக போவதுதான் தமிழக நலன்களுக்கு நல்லது என்றும் முருகன் கூறியுள்ளார். இப்படி திமுக அரசின் பல செயல்பாடுகளை பாஜக தலைவர்கள் வெளிப்படையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

எதிர்த்து அரசியல்
அறிஞர் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பல நேரங்களில் மத்திய அரசை கடுமையாக எதிர்த்தது பிற மாநிலங்களோடு இணைந்து தமிழக நலன்களை காத்துள்ளனர். அந்த திராவிட பாரம்பரியத்தின் வழியில்தான் ஸ்டாலின் பயணத்தை தொடங்கியுள்ளார். எனவே மத்திய அரசை எதிர்ப்பதால் தமிழக நலன் கெட்டுவிடாது என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். அதிமுக தரப்பிலேயே கூட ஸ்டாலினின் செயல்பாடுகளுக்கு ஆதரவு எழுந்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி அளித்த பேட்டி இதை உறுதி செய்கிறது.

ஜெயலலிதா மாதிரி
கே.சி.பழனிச்சாமி கூறுகையில், திமுக அரசின் ஆரம்பகட்ட செயல்பாடுகள், மத்திய அரசை நோக்கி, ஜெயலலிதா முன்னெடுத்த அரசியலை போல இரு்க்கிறது. ஜெயலலிதா அளவுக்கு ஆவேசமாக இல்லை என்றாலும், எடப்பாடி பழனிச்சாமி அரசு இருந்தபோது மத்திய அரசிடம் பேணிய உறவைவிட இது ஆவேசமாகத்தான் இருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ மத்திய அரசுக்கு பணிந்து நடப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசியல்
இந்த நிலையில்தான், நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை எதிர்க்க தேசிய அளவிலான பிற கட்சி தலைவர்களை ஸ்டாலின் தலைமை தாங்குவாரா என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. ஆனால் இதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார்கள். மமதா பானர்ஜியோ அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலோ அதற்கான இடத்தில் இருக்க கூடும். ஆனால் ஸ்டாலின் தேசிய அரசியலில் ஆர்வம் காட்ட மாட்டார், மேலும் மொழி ஒரு தடைக் கல்லாக இருக்கும். அதேநேரம், பினராயி விஜயன், மமதா, கெஜ்ரிவால் என மோடி கொள்கைகளுக்கு எதிரான முதல்வர்களுக்கு கூடுதலாக ஒரு கூட்டாளியாக ஸ்டாலின் கிடைத்துவிட்டார் என்பது உறுதி. இந்த முதல்வர்கள் இணைந்து செயல்பட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால், மாநில நலன்களை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications