“இன்னிக்கே ஆரம்பிங்க.. சொல்றதுக்கு அவ்ளோ இருக்கு” திமுக மா.செக்களுக்கு ஸ்டாலின் போட்ட ஆர்டர்!
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், தொகுதி பார்வையாளர்களுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தின்போது மா.செக்களுக்கு முக்கிய ஆர்டர் போட்டுள்ளார் ஸ்டாலின்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், திமுகவை பொறுத்தவரை, 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, சட்டமன்றத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

ஸ்டாலின் அறிவுறுத்தல்
கடந்த ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பூத்களிலும் 30 சதவிகிதம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி இருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலமாக திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற பெயரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து செயல்படுத்தும் விதமாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.
ஸ்டாலின் போட்ட ஆர்டர்
அப்போது பேசியுள்ள ஸ்டாலின், வரும் சட்டசபை தேர்தலில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும். 7வது முறையாக திமுக ஆட்சி அமைத்தது என்ற வரலாறு படைக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 30 சதவீத வாக்காளர்களை, திமுக உறுப்பினர்களாக்கும் இலக்கை எட்ட வேண்டும்; அதன் வாயிலாக, தேர்தல் பணிகளை துவங்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களிடம் சொல்லுங்க
மேலும், உறுப்பினர் சேர்க்கையின் போது பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் கூறக்கூடிய குறைகளை கேட்டுக்கொண்டு அவர்களுக்கு பொறுமையுடன் பதில் அளிக்க வேண்டும். மேலும் திமுக அரசு அமைந்த பிறகு காலை உணவு திட்டம், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப் பெண் போன்ற ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இது போன்ற திட்டங்களை எல்லாம் பொதுமக்களிடம் விளக்கி கூறி அவர்களை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இன்று முதலே கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துங்கள் என ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
தலைமைத் தொண்டன்
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் - நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை 'ஓரணியில் தமிழ்நாடு' என தி.மு.கவில் இணைத்திட, சொல்லாற்றல் - செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது.
'களம் 2026' தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களை சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றி பெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications