அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்... உண்மையை உடைத்த ட்வீட்
சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவரிடம் நலம் விசாரித்ததாக தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றது உண்மை என்றும் ஆனால் தனக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருந்த நிலையில் ஸ்டாலின் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவு, அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், எம்.எல்.ஏ.க்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த தொற்று காரணமாகவும், கூடுதலாக மற்ற சில உடல் பிரச்சனைகள் இருந்ததாலும் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. பழனி கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் மறுப்பு
இதனிடையே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஏற்பட்ட தொடர் இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக மியாட் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று மாலை செய்திகள் வெளிவந்த நிலையில், தனக்கு கொரோனா தொற்று இல்லை, காய்ச்சல் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்திருந்தார். அவர் விளக்கம் அளித்த சில மணி நேரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்தேன் என ஸ்டாலின் ட்வீட் செய்திருக்கிறார்.

தர்மசங்கடம்
அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இல்லை எனக் கூறப்பட்ட நிலையில், கொரோனா தொற்றினால் அமைச்சர் அன்பழகன் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழு நலம்பெற்று மக்கள் பணியாற்ற வரவேண்டும் என்றும் பொதுவாழ்வில் இருப்பவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் இந்த ட்வீட்டர் பதிவு அமைச்சர் கே.பி.அன்பழகன் தரப்பிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன் தினம்
அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று முன் தினம் வரை தனது அலுவல் பணிகளை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய 4 பேர் உட்பட இன்னும் பல உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications