இந்தியாவுக்கு அனுமதி கொடுக்க அமெரிக்கா யாரு..மானத்தை காப்பாத்துங்க மோடி..ரஷ்யா விவகாரத்தில் ஸ்டாலின்
சென்னை: ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு இந்தியா எண்ணெய் வாங்கிக் கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் மத்திய பாஜக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியாவுக்கு அனுமதி வழங்க அமெரிக்கா யார். சர்வதேசளவில் இந்தியாவின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா இந்தியா மீது அடுத்தடுத்து வரிச்சுமைகளை சுமத்தி நெருக்கடியை கொடுத்தது. அந்த பஞ்சாயத்துகள் எல்லாம் சரி செய்யப்பட்டு இந்தியா - அமெரிக்கா இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டது. [ MK Stalin]

ரஷ்யா விவகாரம்
இதற்கு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் முடிவில் இருந்து பின் வாங்கியது முக்கிய காரணமாக இருந்தது. தற்போது சர்வதேசளவில் மீண்டும் போர் மேகங்கள் எழுந்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து அடுத்த 30 நாட்கள் எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்திருப்பதாக அறிவித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு, அமெரிக்கா 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது. இது அடிப்படையில் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தியா தன்னுடைய சொந்த எரிசக்தி தேவைக்கு, மற்றொரு நாட்டின் அனுமதி பெற வேண்டிய அவசியம் என்ன.
கொந்தளித்த ஸ்டாலின்
இதைவிட ஒரு கவலைக்குரிய சம்பவம் நடந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் சர்வதேச கப்பற்படை மறுஆய்வு 2026 என்கிற பெயரில் இந்தியா கடற்படை பயிற்சியை நடத்தியது. இதில் பங்கேற்ற ஐஆர்ஐஎஸ் டேனா (IRIS Dena) என்ற ஈரானிய கப்பலை அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. அந்த கப்பல் இந்தியாவில் நடந்த ஒரு பன்னாட்டுப் பயிற்சியில் பங்கேற்க வந்துள்ளது.
நம் நாட்டிற்கு வந்த ஒரு கப்பல் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது இந்தியா அமைதியாகவோ, செயலற்று இருப்பது சரியல்ல. மத்திய பாஜக அரசு இந்தியாவின் நீண்டகால மரபான, சுதந்திரமான வெளியாட்சி கொள்கை மற்றும் மூலோபாய தன்னாட்சி ஆகியவற்றில் முழுமையாக சமரசம் செய்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியத்தை காக்க வேண்டும். முக்கியமாக நாட்டின் இறையாண்மை மற்றும் நலன்களை பாதுகாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications