இந்தியாவில் தமிழ்நாடு தான் கெத்து..மத்திய அரசே சொல்லிருச்சே! இதுதான் காரணம்..மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் 6வது முறையாக சென்னை ஐஐடி முதலிடத்தையும், சிறந்த மாநில பல்கலைக்கழகமாக சென்னை அண்ணா பல்கலைக் கழகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து ஜொலிக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஆண்டு ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை வெளியிட்டு நிறுவங்களின் முதல்வர்கள் மற்றும் துணைவேந்தர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
கல்வி நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் சிறந்த கல்வி நிறுவனம், பல்கலைக் கழகங்கள் உள்ளிட்டவை தேர்ந்தெடுக்கப்படுகிறது. பொறியியல், சட்டம், மருத்துவம், நிர்வாகம் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் இந்த விருதுகளை வழங்கி வருகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் கற்பித்தல் தரம், கற்றல், உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் பணியமர்வு உருவாக்கப்படும் பட்டதாரிகளின் தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு இந்த தரவரிசை பட்டியலானது ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் சென்னை ஐஐடி முதலிடத்தை பெற்றிருக்கிறது. 2வது இடத்தை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமும், மூன்றாமிடத்தை மும்பை ஐஐடி, நான்காம் இடத்தை டெல்லி ஐஐடியும் பிடித்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டு சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த சென்னை ஐஐடி அதற்கு பிறகு தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல மாநில சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடத்தை பெற்று இருக்கிறது. இது மட்டுமின்றி கோவை பாரதியார் பல்கலைக்கழகம் இதே பிரிவில் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. சிறந்த மருத்துவ பிரிவில் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மூன்றாவது இடத்தையும். பல் மருத்துவ பிரிவில் சென்னை சவிதா கல்லூரி மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் பிஎஸ்ஜிஆர், லயோலா கல்லூரில் உள்ளிட்டவை சிறந்த கல்லூரி உள்ளிட்ட பல பிரிவுகளில் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றது. இந்நிலையில் தரவரிசை பட்டியலில் தமிழக கல்வி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதின் மூலம் இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து ஜொலிக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்," இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது.. தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் 2024ல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது.
இந்தியாவிலேயே தரமான கல்வி வழங்குவதில் ஒரு புதிய மைல்கல்லை தமிழ்நாடு அமைத்துள்ளது.
நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடல் அரசுக்கு இது ஒரு பெருமையான தருணம். நான்முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களின் மூலம் நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications