மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது உண்மை என்றால்; நிதியை பெற ஏன் போராட்டம்... மு.க.ஸ்டாலின் கேள்வி
Recommended Video

திருச்சி : கஜா புயல் பாதிப்பை திமுக அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், உணவு, குடிநீர், மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையே, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் நிவாரண பொருட்கள் அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்த வேண்டுகோளை ஏற்று கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடந்த 2 நாட்களாக நிவாரண பொருட்களை திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்துக்கு லாரி, வேன்களில் திமுகவினர் அனுப்பி வைத்தனர். ரூ.76 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனைத்தும் லாரிகளில் இன்று காலை 11 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தில் இருந்து புயல் பாதித்த மாவட்டங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின் அப்போது கூறியதாவது : கஜா புயல் பாதிப்பை அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. திமுக இதில் அரசியல் செய்யவில்லை. அரசியல் செய்வதாக பொய் செய்தி பரப்பப்படுகிறது. புயல் பாதிப்பு பகுதிகளை அமைச்சர்கள் தரை வழியாக ஆய்வு செய்யும் போது முதல் அமைச்சரால் ஏன் முடியவில்லை. ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தது பற்றி முதல்வர் அளித்துள்ள விளக்கம் வேடிக்கையானது. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது உண்மை என்றால் தமிழக அரசு போராடி நிதியை பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய தென் எல்லையே இயற்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கும் போது, மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடமிருந்து இன்னும் முதற்கட்ட நிதிகூட வரவில்லை! இடைக்கால நிதியாக கோரப்பட்டு உள்ள 1500 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்குமா என்பது சந்தேகமாக உள்ளது. எதிர்க்கட்சிகளை அழைத்து ஆலோசனை செய்து விட்டு முதல்வர் டெல்லி சென்று இருக்க வேண்டும். தமிழகத்தை ஏற்கனவே 3 முறை புயல் தாக்கிய போதும் மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை . ஏற்கனவே, அதிமுக அரசு ரூ.1 லட்சம் கோடி கேட்டதற்கு மத்திய அரசு ரூ.2,000 கோடி தான் தந்தது . மாநில அரசு நிவாரண பணிகளை விரைவாக செய்யவில்லை. மத்திய அரசிடம் தமிழக அரசு வாதாடி உரிய புயல் நிவாரண நிதியை பெற வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக பேரிடர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய அரசு, இந்த கஜா புயலுக்காவது நிதியை முழுமையாக வழங்கிட வேண்டும். பல மாவட்டங்களில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்றும் கூறினார்.
இந்த பேட்டியின் போது திமுக முதன்மை செயலாளர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் மகேஷ் பொய்யாமொழி, சௌந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாநகர மாவட்ட செயலாளர் மு. அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.












Click it and Unblock the Notifications