தன்னை புகழ்ந்து தள்ளிய, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஸ்டாலின் சொன்ன நச் பதில்!
Recommended Video
சென்னை: தேர்தலில் பாஜகவை, திமுக வீழ்த்திவிட்டதாக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கூறியதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் இன்று, கலந்துகொண்டு பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்டாலின் பற்றி கூறிய கருத்துதான் இன்றைய அரசியலின் பேசு பொருள்.
ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிவிட்டார். அடுத்த தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு உள்ள தலைவர்களில் ஒருவர் சி.பி.ராதாகிருஷ்ணன். அவரே இப்படி பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.

உழைப்பாளி
ராதாகிருஷ்ணன், பேசுகையில், வெற்றித்தளபதி என்றும், அவரது உழைப்பு தன்னை போன்ற பலரை இன்னும் உழைக்க வேண்டும் என உணரச்செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், உழைப்பின் முலம் ஸ்டாலின் தங்களை வீழ்த்தி விட்டதாகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

சலசலப்பு
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக பாஜகவும்-திமுகவும் உள்ள நிலையில், திடீரென ஸ்டாலினை சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசியது அனைத்து கட்சிகளிலுமே, அரசியல் ரீதியான சலசலப்புகளுக்கு காரணமாகியுள்ளது.

ஸ்டாலின் பேச்சு
இதே நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்று பின்னர் பேசினார். அப்போது அவர் ராதாகிருஷ்ணனுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதை பாருங்கள்: நம்முடைய, பாஜகவின் முன்னணி தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பேசும்போது, மனம் திறந்து பேசியுள்ளார். அவர்களை வீழ்த்திவிட்டோம் என்று சொன்னார். நான் அதை கொஞ்சம் திருத்திச் சொல்கிறேன். நாங்கள் வீழ்த்தவில்லை, தோற்கடித்துள்ளோம். நாங்கள் என்றுகூட சொல்லவிரும்பவில்லை, மக்கள் தோற்கடித்துள்ளனர். இவ்வாறு ஸ்டாலின் கூறியதும், திருமண வீட்டுக்கு வந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஜெயக்குமார் குற்றச்சாட்டு
மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் மென்மையான போக்கை கடைபிடிக்க தொடங்கியுள்ளார் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று விமர்சனம் செய்து ஒரு பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில், நாங்கள் வீழ்த்தவில்லை, தோற்கடித்தோம், அதுவும் மக்கள்தான் தோற்கடித்தார்களே தவிர, திமுக தோற்கடித்ததாக சொல்ல முடியாது என ஸ்டாலின் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications