மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பார்த்து சிலருக்கு எரிச்சல்,பொறாமை.. முதல்வர் ஸ்டாலின் டைரக்ட் அட்டாக்!
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிலருக்கு எரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது, அதனால் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஸ்டாலின் பதிலடி: இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசுவின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பயணம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்டவை இதற்கு உதாரணம்.
வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்' தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிலருக்கு எரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் எரிச்சலில் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

பொறாமை: நம்முடையை நலத்திட்டங்களை விமர்சிப்பவர்களை பார்த்து, நிறைய பதில் கேள்வி கேட்க முடியும். வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒருவருக்கு ரூ.15 லட்சம் வழங்கலாம் என்று 2014 தேர்தலுக்கு முன்பாக மோடி பேசினார். ரூ.15 லட்சம் கூட வேண்டாம் ரூ.15 ஆயிரமாவது தந்தார்களா? தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக நிறைவேற்றியுள்ளதா?
15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரம் கொடுத்திருக்கிறாரா, அதுவும் வேண்டாம் 15 ரூபாயாவது கொடுத்திருக்கிறாரா? இதைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா. மாதம் 2 கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்னார் பிரதமர் மோடி. அதனையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், விவசாயிகள் டெல்லியில் ஆண்டுக் கணக்கில் போராடியபோதும் அதனை கண்டு காணாமல் இருந்தார்கள். இப்படிப்பட்ட மோசமான, சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது." என விளாசினார்.












Click it and Unblock the Notifications