அடுத்த 6 மாதத்தில் இன்னொரு பட்ஜெட்.. வாக்குறுதிகள் அரசாணைகளாக வேண்டும்.. ஸ்டாலின்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் தகவல் பலகை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் இன்னும் 6 மாதத்தில் அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்துத் துறை செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த கூட்டத்தில் அவர் கூறுகையில் வாக்குறுதிகள் அனைத்தும் அரசாணைகளாக மாற வேண்டியது அவசியம்.
திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர்
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை கால வரம்புக்குள் நிறைவேற்ற வேண்டும்.
வழக்கு
அறிவிப்புகளை செயல்படுத்தும் போது வழக்கு வராமல் பார்த்துக் கொள்வது அதிகாரிகளின் பொறுப்பாகும். இன்னும் 6 மாதத்தில் அடுத்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையிலேயே ஆன்லைன் தகவல் பலகை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்கள் ஆன்லைன் தகவல் பலகையில் இடம்பெறும்.
நிர்ணயம்
ஒவ்வொரு அறிவிப்பையும் காலத்தை நிர்ணயித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலின் போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார். 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்து முதல் பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டின் போது வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
6 மாதம்
மேலும் தாக்கல் செய்யப்படும் போதே இது 6 மாதத்திற்கான பட்ஜெட் என தெரிவித்திருந்தனர். எனவே அடுத்த 6 மாதத்தில் இன்னொரு பட்ஜெட் தாக்கலாகிறது. இதில் என்னென்ன அம்சங்கள் இடம் போகிறது என தெரியவில்லை. இந்த பட்ஜெட்டின் போது திமுக கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. திமுகவால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார ஆலோசனை குழுவும் நிதித் துறையும் இப்போதிலிருந்தே அந்த பட்ஜெட்டை தயார் செய்யும் பணிகளில் ஈடுபடும் என தெரிகிறது. கடந்த பட்ஜெட்டின் போது 3 மாதங்களாக பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் இவர்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள்
தலைமைச் செயலகத்தின் கதவுகளை எந்த பொதுமக்களும் தட்டாதபடி மாவட்ட அளவில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு நேற்று முன் தினம் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்ட நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.