பெண்கள் முன்னேறுவதை பார்த்து பயப்படுகிறார் மோடி.. ஆர்.எஸ்.எஸ் ஆள் தானே.. அட்டாக் மோடில் ஸ்டாலின்!
சென்னை: பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்த பிரதமர் மோடி பயப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சமீபத்தில் வட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். தென் மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்பட்டு இருப்பதால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்தக் கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தோல்வி பயம் என்ன செய்யும்? பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்து கொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்! இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் - பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும் தூண்டச் செய்யும்! ஜூன்-4 இந்தப் பொய்கள் உடைபடும்! வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "பத்தாண்டு கால சாதனைகள் என்று ஏதுமில்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்த துணிந்திருக்கிறார் பிரதமர் மோடி. கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்து வரும் விடியல் பயணத் திட்டத்தை பகிரங்கமாக எதிர்க்கிறார். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம், பயண சுதந்திரத்தை தந்ததோடு, பெண்களுக்கு பல வகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை என புதுப் புரளி கிளப்பி இருக்கிறார்.
2019ல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள் 2023ல், 9 கோடியே 11 லட்சம் ஆக உயர்ந்திருக்கிறதே தவிர, குறையவில்லை. சென்னை மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கத்திற்கு நிதி தராமல் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, உண்மைகளை மறைத்து விடியல் திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்.
பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால், பெண்களின் முன்னேற்றம் கண்டு அஞ்சுகிறார். பாஜகவின் வகுப்புவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது. பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும். இந்தியா வெல்லும்" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் பற்றி பிரதமர் மோடி விமர்சித்த நிலையில், பெண்களுக்கான திட்டத்தின் மீது மோடி வீண் பழி போட்டிருப்பதாகவும், பெண்களின் முன்னேற்றம் கண்டு பிரதமர் மோடி அஞ்சுவதாகவும் விமர்சித்துள்ளார் ஸ்டாலின். பாஜக பாணியிலேயே மோடி பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்வினை ஆற்றி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications