கொளத்தூர் தொகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்.. தொடங்கி வைத்த ஸ்டாலின் !
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பத்திரிகைச் செய்தி"
இன்று (17.05.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு 69-இல் உள்ள திரு.வி.க.நகர் மண்டலம் 6-இல் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தி.மு.க. சார்பில் தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அங்குப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கினார்.
பின்னர், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தி.மு.க. சார்பில், ஊரடங்குக் காரணமாகத் தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், அரிசி, எண்ணெய், பருப்பு, உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்புப் பொருட்களையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், கழகத் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.