Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை பாராட்டுவதில் காட்டலையே! ஊடகத்தினரிடம் நேருக்கு நேர் சொன்ன ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில ஊடகங்கள் விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை, நல்ல திட்டங்களை பாராட்டுவதில் அதிகம் கவனம் செலுத்துவது இல்லை. எல்லோரையும் சொல்லவில்லை. பாராட்டுவதில் மட்டும் மென்மையான போக்கைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை? என ஊடக துறையினர் உடனான சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று நாளையுடன் நான்காண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டு தொடங்குகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,"மிகவும் மகிழ்ச்சியான நாளில், நிறைவான நிலையில் எல்லோரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு இருக்கக்கூடிய பலரும் எனக்கு ஓரளவுக்கு தெரிந்த முகம்தான். நிறைய பேர்களிடம் நேரடியாகவும், தொலைபேசியிலும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவன் நான். அதே நேரத்தில், இன்றைக்கு ஒரே நேரத்தில், ஒரு சேர சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

MK Stalin Media dmk

2021-ல், தமிழ்நாட்டில் மக்களுடைய நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்று, ஆறாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தது. மே 7-ஆம் நாள் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். நாளைக்கு மே 7. திராவிட மாடல் அரசு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறது. தேர்தல் அறிக்கையில் சொன்ன பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களையும் தொலைநோக்குப் பார்வையோடு அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறோம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டத்தின் தொடக்கத்திற்கான நாளாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்! அதேபோல், சாதனைக்கு மேல் சாதனையை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடும், அந்த மகிழ்ச்சியோடு தான் நான் உங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பை இன்றைக்கு நான் பெற்றிருக்கிறேன். நாம் எந்த மாதிரியான சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம் மற்ற எல்லோரையும் விட பத்திரிக்கையாளர்களான உங்களுக்கு தான் நன்றாக தெரியும்.

முந்தைய ஆட்சியாளர்களால் சீரழிந்த பத்தாண்டு கால நிர்வாகம் ஒருபக்கம். மதவாதம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களுக்கு இடமளித்து, இந்திய நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த நிலை ஒரு பக்கம். தமிழ்நாட்டுக்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுக்கும் ஒன்றிய அரசின் இன்னொரு பக்கம்!

இதையெல்லாம் சமாளித்து நாம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது. சரியான இலக்கை நிர்ணயித்து, அதனை நோக்கி உறுதியாக பயணித்து, நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நான்காண்டு கால திராவிட மாடல் அரசே சாட்சியாக அமைந்திருக்கிறது! அரசுகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

ஒன்று, கொள்கை அரசு! இன்னொன்று, சேவை அரசு! நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், கொள்கை - சேவை இரண்டிலும் சிறந்து விளங்குகின்ற அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நான்காண்டுகளில் எப்படிப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் வந்தது. எவ்வளவு அவதூறுகள் பரப்பப்பட்டது என்பது வேறு யாரையும் விட உங்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், எந்த இடத்திலும், நாங்கள் கொள்கையில் தடம் மாறவில்லை! எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் நாங்கள் சோர்ந்து போகவில்லை!

அதனுடைய வெளிப்பாடுதான் நம்முடைய அரசின் முத்திரைத் திட்டங்கள்.கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணம் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 'புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், நான் முதல்வன் திட்டம் என்று ஏராளமான திட்டங்களை வரிசைப்படுத்தி சொல்லிக் கொண்டே இருக்க முடியும்! இந்தத் திட்டங்களை பற்றியெல்லாம், இங்கு வந்திருக்கும் முக்கியமான துறை அமைச்சர்கள் விளக்குவார்கள். அதேபோல், அதிகாரிகளும் அதைப்பற்றி விளக்கி கூறுவார்கள்.

இந்தச் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் உங்களுடைய பங்கு மிக அதிகம்! அதற்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்! நீங்கள் நேர்மையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அணுகுமுறையோடும் செயல்பட்டதால்தான் அரசின் சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது. இதற்காக நான் எத்தனை முறை உங்களுக்கு நன்றி சொன்னாலும் தகும்! அரசின் செய்தி அறிக்கையை வெளியிடுவது நேரலை செய்வது என்று மட்டுமல்லாமல், திட்டங்களின் நோக்கத்தை விளக்குவது திட்டங்களால் பயன்பெற்றவர்களின் பேட்டிகளை பதிவு செய்து வெளியிடுவது என்று நம்முடைய அரசின் செயல்பாடுகளை விரிவாக கொண்டு சேர்த்திருக்கிறீர்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் -விமர்சனங்களை முன்வைத்தால், அதனை ஆக்கபூர்வமாக நான் ஏற்றுக்கொள்கிறவன். ஆலோசனைகள் இருந்தால், அதை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறேன். உங்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் என்ன என்றால்.. இந்தியாவிற்கே முன்மாதிரியாக திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நம்முடைய திட்டங்களை பார்த்து, பல்வேறு மாநில அரசுகள் அந்த திட்டங்களை அவர்கள் மாநிலங்களிலும் செயல்படுத்துகிறார்கள்.

அப்படிப்பட்ட திட்டங்களை, நீங்கள் மனப்பூர்வமாக பாராட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விமர்சிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய அறுபதாண்டுகால அரசியல் வாழ்க்கையே விமர்சனங்களால் செதுக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியும். எனவே. நம்முடைய அரசின் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்துவதற்கான கருத்துகள் ஆலோசனைகள் இருந்தால் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்... அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவோம்! எல்லோருடைய கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

ஆனால், சில ஊடகங்கள் விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை, நல்ல திட்டங்களை பாராட்டுவதில் சில ஊடகங்கள் அதிகம் கவனம் செலுத்துவது இல்லை. எல்லோரையும் சொல்லவில்லை. பாராட்டுவதில் மட்டும் மென்மையான போக்கைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை? பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்! எனவே. தயாங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தச் ஆலோசனைகளையும் சந்திப்பில், உங்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகதான் இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்த, உங்களுடைய ஆழமான பரந்துபட்ட பார்வையும், அனுபவமும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக நிச்சயமாக இருக்கும்! சமத்துவம் சமூகநீதி மதச்சார்பின்மை மொழிப்பற்று சமதர்மம் சகோதரத்துவம் இன உரிமை மாநில சுயாட்சி ஒன்றியத்தில் கூட்டாட்சி ஆகிய அரசியல் பண்பாடுகளைக் கொண்ட மண், நம்முடைய தமிழ்நாடு!

இந்த இலட்சியங்களை அடையும் பயணத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்தப் பயணத்தில், ஊடகங்களான உங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே, தனிப்பட்ட ஸ்டாலினையோ - திராவிட முன்னேற்றக் கழக அரசையோ நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நான் கேட்கவில்லை; தமிழ்நாட் பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் எடுத்துச் சொல்லுங்கள். தனித்துவத்தையும் மக்களிடம் உங்கள் துணையோடு தமிழ்நாட்டை நிச்சயம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+