திரூவாரூர் இடைத் தேர்தல்.. அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்க வேண்டும்.. ஸ்டாலின் திடீர் கோரிக்கை
சென்னை: திருவாரூர் இடைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினர் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென கோரிக்கை விடுத்துள்ளார்.
கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து திமுக சார்பில் அக்கட்சி மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் நேற்று, வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் அழகிரி சார்பாக அவரது மகன் தயா அழகிரி போட்டியிட கூடும் என்றும் பேச்சுக்கள் நிலவுகின்றன.
அக்னி பரிட்சை
லோக்சபாவிற்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கு முன்பாக நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான், லோக்சபா தேர்தலில் வலுவான கூட்டணி அமையும் என்பது திமுகவின் கணக்காக உள்ளது. எனவே, இந்த தேர்தலில் திமுகவுக்கு அக்னி பரிட்சையாக பார்க்கபடுகிறது.
கட்டாயம்
ஏனெனில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் தொகையை கொடுத்து தோற்றது. இந்த நிலையில் கருணாநிதி வகித்த தொகுதியை கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அந்த கட்சி சிக்கியுள்ளது.
|
கருத்து கேட்பு
இப்படியான ஒரு சூழ்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட ஒரு ட்வீட்டில், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயம்
ஸ்டாலினின் இந்த கருத்தை வைத்துப் பார்க்கும்போது திருவாரூர் இடைத்தேர்தலை சந்திப்பதற்கு திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது நன்றாகத் தெரிகிறது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.