தொடர்ந்து அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை.. மத்திய அமைச்சருக்கு ஸ்டாலினிடம் இருந்து பறந்த கடிதம்
சென்னை: மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேர் மற்றும் அவர்களது படகுகளை உடனே விடுவிப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை மீட்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்கடை. இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
9 மீனவர்கள் கைது
நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை மீனவ கிராமத்திலிருந்து 9 மீனவர்கள் இரண்டு மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 02.01.2026 அன்றிரவு இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டின் தொடக்கத்திலேயே நடைபெற்றுள்ள இச்சம்பவம், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் அவல நிலையை மீண்டும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
73 மீனவர்கள், 251 மீன்பிடிப் படகுகள்
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று தொடர்ந்து கைது செய்வதும், அவர்களது மீன்பிடிப் படகுகளைப் பறிமுதல் செய்வதும் தடையின்றி நடைபெறுவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 73 மீனவர்களும், 251 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் காவலில் உள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்தத் தொடர்ச்சியான கைது சம்பவங்கள், தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களிடையே பெருத்த இன்னல்களையும், பதட்டத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் இனிமேல் நடைபெறுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும், ஒன்றிய அரசு உரிய தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications