"என்னாச்சு".. டக்குன்னு போனை போட்ட ஸ்டாலின்.. வேட்டியை மடித்து கட்டி குதித்த தலைகள்..!
திமுக தலைவர் ஸ்டாலின், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தி உள்ளார்
சென்னை: முன்னாடி மாதிரி இல்லை ஸ்டாலின்.. எக்குத்தப்பா ஒரு விஷயம் காதில் விழுந்தால் போதும், அதிரடியாக களம் இறங்கி விடுகிறார்.. இதை திமுக மட்டுமல்ல, மற்ற கட்சிகளும் வியந்து பார்க்கின்றன.
கடந்த 2016 தேர்தலை பொறுத்தவரை, திமுக அசால்ட்டாக இருந்துவிட்டது.. விழுந்து விழுந்து தேர்தல் விவகாரத்தை கையில் எடுத்தாலும், நூலிழையில் ஆட்சியை தவறவிட்டுவிட்டது..
அதாவது, சுமார் 20 தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனத்தை திமுக அன்று செலுத்தியிருந்தால், ஆட்சியை பறி கொடுத்திருக்காது.. அதிலும் ஒரு சதவீத வாக்கு சதவீதத்தில் பறி கொடுத்தது ஜீரணிக்க முடியாத ஒன்று. மக்கள் நலக்கூட்டணி ஓட்டுக்களை அன்று மானாவாரியாக பிரித்தாலும், திமுக பெற்ற வாக்கு சதவீதமானது அளப்பரியதுதான். இருந்தாலும் ஆட்சியை தவறவிட மெத்தனம் என்ற காரணத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
இப்போதும் அப்படி ஒரு மெத்தனம்தான் காணப்படுகிறது.. ஒரு சில மாதங்களாகவே வெளியாகும் கருத்து கணிப்புகளில் திமுகவுக்கு சாதகமான விஷயங்களே வந்து கொண்டிருக்கின்றன.. இதனால் பல்வேறு இடங்களில் மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் சரியாக வேலை பார்க்காமல் உள்ளதாகவும், அடுத்து நாம்தானே என்ற மிதப்பில் இருப்பதாகவும் செய்திகள் கசிய தொடங்கின.
அடுத்ததாக, கூட்டணி கட்சி வெற்றி பெற நாம்ஏன் இறங்கி வேலை பார்க்க வேண்டும்? என்ற எண்ணமும் சில தொகுதிகளில் நிர்வாகிகளுக்கு எழுந்துள்ளது.. அதனாலும் சுறுசுறுப்பாக வேலை செய்யாமல் இருந்துள்ளனர் போலும்.. மேலும், சீட் கிடைக்காமலும் சிலர் அதிருப்தியில் உள்ளதால், அவர்களும் களப்பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.
ஆக, இதுபோன்ற தகவல்கள் எல்லாமே ஸ்டாலினிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.. இதைக்கேட்டு அதிர்ந்த ஸ்டாலின், உடனடியாக அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினாராம்... "இறங்கி வேலை பார்த்தால்தான், வெற்றி நிச்சயமாகும்".. என்பதை புரிய வைத்து அவர்களுக்கு ஊக்கம் தந்திருக்கிறாராம்.. இதனால், பூரித்து போன நிர்வாகிகள், மா.செ.க்கள் வேட்டியை மடித்து கொண்டு களத்தில் குதித்து வேலை பார்த்து வருகிறார்களாம். அதுமட்டுமல்ல, "நாம்தான் அடுத்தது" என்று பூஸ்ட் செய்தி, தொகுதிக்குள் "தாராளத்தை" காட்டும் மனநிலையை தந்துள்ளதாம்.
கலைஞர் இருக்கும்போது, திமுகவுக்குள் தேர்தல் சமயங்களில் ஏகப்பட்ட உள்ளடி வேலைகள் நடக்கும், அதிருப்திகள் நிலவும், சீட் கிடைக்காத விரக்தியில் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள்.. அப்படி சீட் கிடைக்காத முக்கிய பிரமுகர்களை, நேரடியாக அழைத்து கலைஞர் சமாதானப்படுத்துவார்.. "உடன்பிறப்புகளே சோர்ந்துவிடாதீர்கள்" என்று முரசொலியில் கடிதமும் எழுதுவார்.. இதே பாணியைதான் ஸ்டாலின் கடைப்பிடிக்கிறார் என்கிறார்கள்.. நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் போட்டு பேசிவிடுவதால், உள்ளடிகளுக்கு இடமே இல்லாமல் போய்விடுகிறது என்கிறார்கள்..!