எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!!
சென்னை: திமுக போட்டி எம்எல்ஏவும் சமீபத்தில் பாஜகவில் இணைந்து இருக்கும் கு.க செல்வத்தின் மருமகன் பூந்தமல்லி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நேற்று இரவு உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம். திமுக மாவட்டச் செயலாளர் நியமனத்தில் இவருக்கும், திமுக தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். திமுகவில் இருந்து கு.க.செல்வம் நீக்கப்பட்டு போட்டி எம்எல்ஏவாக உள்ளார்.

கு.க.செல்வத்தின் மூத்த மகளின் கணவர் துளசிராமன் (50). இவர் சென்னை, கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியில் வசித்து வந்தார். வளசரவாக்கத்தில் பணியாற்றி வந்தார். இவரது மகள் பூந்தமல்லியில் உள்ள சவிதா பல் மருத்துவமனையில் மருத்துவம் பயின்று வருகிறார். அங்கேயே தங்கிப் படித்து வருகிறார். துளசிராமனின் தந்தை சென்னை காவல்துறையில் எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
கல்லூரிக்குச் சென்று வழக்கம்போல் தனது மகளை துளசிராமன் பார்ப்பது உண்டு. வழக்கம்போல் நேற்றும் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லியில் இருக்கும் கல்லூரிக்குச் சென்று தனது மகளைப் பார்த்துவிட்டு இரவு 7.30 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் துளசிராமன் வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த துளசிராமனை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் விபத்து ஏற்படுத்தியவர்கள் அனுமதித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே துளசிராமன் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த துளசிராமனின் உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications