என் தம்பி கடத்தலில் பூவை ஜெகன்மூர்த்திக்கு தொடர்பு இல்லை! காதல் திருமணம் செய்த இளைஞர் பரபரப்பு
சென்னை: எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி என்னை மிரட்டவில்லை என காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் தனுஷ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மேலும் என் தம்பி கடத்தப்பட்ட விவகாரத்திலும் ஜெகன் மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு தனுஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நானும் அந்த பெண்ணும் 5 ஆண்டுகளாக காதலித்தோம். எங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெண்ணை என் வீட்டிற்கு கூட்டி வந்து பெண்ணின் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டேன்.

என் மனைவியை தங்களுடன் அனுப்புமாறு காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் கொடுத்தனர். அப்போது என் மனைவி, அவரது பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டு என்னுடன் இருக்கவே விரும்புவதாக தெரிவித்தார். ஆனாலும் அவருடைய அப்பா, என் மனைவியை அவருடன் அழைத்து செல்ல பிரச்சினை செய்து வந்தார்.
என் தம்பியை கடத்திச் சென்றனர். இதில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாக கூறுகிறார்கள். தம்பி கடத்தப்பட்ட விவகாரத்தில் ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்களை யாரும் மிரட்டவில்லை. போலீஸார் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கக் கூறி கேட்கிறார்கள். எங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், களாம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி (44). இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் (23). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் தேனியை சேர்ந்த 21 வயது பெண்ணுடன் பழகியுள்ளார்.
காதல்
நாளடைவில் இது காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் காதலில் உறுதியாக இருந்தனர். இவர்களது காதல் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவருடைய தந்தை வனராஜ் (55) தனது மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காதலுக்கு எதிர்ப்பு
அவர் குடும்பத்தில் உள்ளவர்களும் பெண்ணை கடுமையாக கண்டித்துள்ளனர். காதல் திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால், இனி நம்மால் தனுஷுடன் சேர்ந்து வாழ முடியாது என அந்த பெண் நினைத்தார். இதையடுத்து "வீட்டை விட்டு வெளியே சென்று நாம் திருமணம் செய்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம்" என்பதை தனுஷிடம், அந்த பெண் தெரிவித்தாராம்.
பதிவு திருமணம்
அந்த பெண்ணை தேனியில் இருந்து அழைத்து வந்த தனுஷ், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தலைமறைவாகிவிட்டனர். பெண்ணை வீட்டில் காணாததால் வனராஜ் அதிர்ச்சி அடைந்து மகளை மீட்க என்ன செய்யலாம் என யோசித்தார். அப்போது மதுரையைச் சேர்ந்த மகேஸ்வரி (55) என்ற பெண்ணை அணுகியுள்ளார். மகேஸ்வரிக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் பிரபலங்கள், வழக்கறிஞர்களை தெரியும் என்பதால் எப்படியும் மகளை மீட்கலாம் என உறுதி கொடுத்துள்ளார்.
பூவை ஜெகன்மூர்த்தி
பூந்தமல்லி ஆண்டரசன்பேட்டையை சேர்ந்தவரும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான கே.வி. குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியிடம் சொல்லி மகளை மீட்கும் முயற்சியில் வனராஜ் தீவிரப்படுத்தியுள்ளார்.
மிரட்டல்
இந்த நிலையில் வனராஜ், தனது உறவினர்களான மணிகண்டன் (46), கணேசன் (47) ஆகியோருடன் வாகனங்களில் ஆட்களை திரட்டி கொண்டு திருவள்ளூருக்கு சென்றாராம். பூவை ஜெகன்மூர்த்தி சொன்னபடி, பூந்தமல்லியை அடுத்த துத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் (35) என்பவரை சந்தித்தனராம்.
சிறுவன் கடத்தல்
பின்னர் கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு களாம்பாக்கத்திற்கு சென்று, அங்கு தனுஷை தேடினராம். அங்கு அவர் இல்லை என்பதால் லட்சுமியை மிரட்டினராம். ஆனால் லட்சுமியோ தனக்கு எதுவும் தெரியாது என கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த வனராஜ், அங்கிருந்த தனுஷின் தம்பி 17 வயது சிறுவனை காரில் கடத்தி சென்றனர்.
போலீஸில் புகார்
தனுஷையும் தனது மகளையும் ஒப்படைத்தால் மட்டுமே சிறுவனை விடுவிப்போம் என அந்த தாயிடம் மிரட்டிவிட்டு சென்றனராம். இதனால் லட்சுமி, 100-க்கு போன் செய்து விவரத்தை தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணையை போலீஸார் தொடங்கினர்.
5 பேர் கைது
இதையறிந்த வனராஜ், அந்த சிறுவனை அடுத்த நாளே அதிகாலை கொண்டு வந்து வீட்டருகே இறக்கிவிட்டுச் சென்றாராம். இந்த நிலையில் தனிப்படை போலீஸார் வனராஜ், மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, சரத்குமார் ஆகிய 5 பேரை இந்த கடத்தல் வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
பூஜை ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் மனு
அவர்களை தொடர்ந்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் தலைமையிலான திருவாலங்காடு போலீஸார் சென்றனர். அங்கு அவர் இல்லை. இதையடுத்து அவரை தேடி வந்த நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது ஜூன் 26ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications