ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக பதவி விலக வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி போர்க்கொடி!
சென்னை: தனது பணியை சரிவர செய்யாததால் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
மேலும், ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழக ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ஆன்லைன் ரம்மி
தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகிறது. வட மாநிலத்தை சேர்ந்த அஜய்குமாரின் மனைவி பந்தனாமாஜி ஆன்லைன் ரம்மியால் 70 ஆயிரம் ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சண்டையில் மனைமுடைந்த பந்தனாமாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவசர சட்ட மசோதா
தமிழகத்தில் இவரை போன்று ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்தவர்கள் ஏராளமானோர் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். இதனை அடுத்து ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யவும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2002 ஐ சட்டசபையில் தாக்கல் செய்து கவர்னரின் ஒப்புதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. அந்த அவசர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் அவசர சட்டம் காலாவதி ஆகி உள்ளது.

ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்
கவர்னர் கேட்ட விளக்கத்தை தமிழக அரசு அளித்தும் அவர் ஒப்புதல் அளிக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பெண்மணி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த மரணத்திற்கு ஆளுநர் அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும்.

பணியை சரிவர செய்யவில்லை
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் மக்களாட்சி தத்துவத்திற்கு நேர் எதிரானதாக அமைந்திருக்கிறது. தனது பணியை சரிவர செய்யாததால் வடமாநில பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான தமிழக கவர்னர் அவர்கள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications