அமித்ஷாவின் பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல! நல்லிணக்கத்திற்கு வேட்டு! ஜவாஹிருல்லா கண்டனம்!
சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video
மொழி உணர்வை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் அமித்ஷா பேச்சுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அலுவல் மொழி
நாடாளுமன்ற அலுவல் மொழி மாநாட்டில் "இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும்" என்று உள்துறை மந்திரி அமித்ஷா பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

அரசியல் காரணம்
அரசியல் காரணங்களுக்காக மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை தக்க வைக்கும் நோக்கத்தோடு பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் நிலவி வரும் ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் வேட்டு வைக்கும் முயற்சியை தொடர்ந்து அது முன்னெடுக்கிறது. இந்திய மக்களை மொழி அடிப்படையில் பிளவுபடுத்தும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது அவரது பொறுப்பிற்கு உகந்ததல்ல.

சங்பரிவாரக் கொள்கை
ஒரு நாடு ஒரு மதம் ஒரு மொழி என்ற சங்பரிவாரக் கொள்கையை ஒன்றிய ஆட்சியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் திணிக்கும் முயற்சியின் வெளிப்பாடகவே உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு அமைந்துள்ளது.இந்தியாவின் பன்முகத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் தான் அமித்ஷா பேசியிருக்கிறார்.

கடும் கண்டனம்
மீண்டும் இந்தி மொழித் திணிப்பு முயற்சி நடக்கும் எனில் தமிழகத்திலுள்ள முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மொழி உணர்வை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் அமித்ஷா பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications