“உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டி”.. 5 சீட் கேட்ட மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா!
சென்னை: திமுக உடன் மனிதநேய மக்கள் கட்சி இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. "உதய சூரியன் சின்னத்தில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும், 5 தொகுதிகள் கேட்டுள்ளோம்" என தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் நேற்று பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தஒ பேச்சுவார்த்தையில், முஸ்லிம் லீக் கட்சி 5 சீட்களைக் கேட்டுள்ளது. எனினும், அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் தியோ சிங், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில் இன்று மதிமுக, மமக ஆகிய கட்சிகளுடன் திமுக குழு, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறது. சட்டசபை தேர்தலையொட்டி திமுக மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் திமுக குழுவினருடன் சந்தித்து பேசினர்.
மனிதநேய மக்கள் கட்சி 5 தொகுதிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலைப் போன்றே இந்த முறையும் அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மணப்பாறை, பாபநாசம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "திமுக கூட்டணியில் சட்டசபை தேர்தலில் போட்டியிட மமவுக்கு 5 இடங்களை கேட்டுள்ளோம். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்த முறையும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம், முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications