"பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும்.. அவமானப்படுத்த முடியாது.." கமல் ஹாசன் ட்வீட்
சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாகத் தந்தை பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்படும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டு வருகிறது.
கும்மிடிப்பூண்டியில் இருந்த பெரியார் சிலை கடந்த மாதம் இறுதியில் மர்ம நபர்களால் தேசப்படுத்தப்பட்டது. அதேபோல சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மணியம்மையார் சிலையும் அவமதிக்கப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று அதிகாலை கோவை அருகே வெள்ளலூரில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளலூர் பகுதியில் உள்ள திராவிடர் கழகத்தின் படிப்பகம் முன்பாக பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து, காவி நிற பொடியை வீசி சென்றுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி சிலர் இந்த விஷம செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் சிலையை அவமதித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.க, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரியார் சிலை அருகே திரண்டு முழக்கம் எழுப்பினர்.
திக தலைவர் வீரமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலும் இந்தச் சம்பவத்திற்குக் கண்டம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.