மக்கள் மனதில் "மய்யம்".. அதிகரிக்கும் கமல் செல்வாக்கு.. காரணம் ரொம்ப ரொம்ப சிம்பிள்!
கமலுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடிக் கொண்டே போகிறது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன் அரசியல் தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்பதில் ஆச்சரியம் இல்லை. காரணம், அவரது பேச்சு, டிவீட்டுகள் குழப்பமாக இருந்தாலும் கூட, ஒரு தலைவருக்கு தேவையான அத்தனை தகுதிகளையும் அவர் விரைவாக வார்த்தெடுத்திருக்கிறார்.
மக்கள் நீதி மய்ய கட்சி ஆரம்பித்து இன்னும் ஒரு வருடம் கூட முடியவில்லை. ஆனால் அதற்குள் அக்கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் செல்வாக்கு கூடியுள்ளதாக இந்தியா டுடே கருத்து கணிப்பு கூறியுள்ளது. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
இந்தியா டுடே சர்வே.. கமல் பிரமாண்ட வளர்ச்சி... ஸ்டாலினுக்கு அடுத்த இடம்.. ரஜினி செல்வாக்கை இழந்தார்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, கமல்ஹாசனின் செல்வாக்கு, 2 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்தியா டுடோ கருத்து கணிப்பு கூறுகிறது. இது கடந்த 3 மாதங்களில் நடந்துள்ளது.
ஊழலுக்கு எதிர்ப்பு
கமலின் செல்வாக்கு அதிகரிக்க 3 காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, ஊழலை கமல் ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வருகிறார். இது மக்களைக் கவர்ந்திருப்பதாக உணர முடிகிறது. காரணம், ஊழலால் பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் மக்கள்தான். டெல்லிக்கு எப்படி அரவிந்த் கெஜ்ரிவாலோ அப்படித்தான் தமிழகத்துக்கு கமல் என்பதுபோல பார்க்கப்படுகிறார். கமல் மீதான மக்கள் நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டு வருவதையும் உணர முடிகிறது.
வறுபடுகிறார்கள்
மற்றொரு காரணம், ஆரம்பத்திலிருந்தே அதிமுகவை பகிரங்கமாக எதிர்த்து வருகிறார். அமைச்சர்கள், அதிகாரிகள், முதல்வர் என ஒருத்தரையும் விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து வருகிறார். இவரது ட்விட்டர் பதிவுக்கு வறுபட்டவர்கள் கணக்கிலடங்காது. இதேதான் திமுகவும். ஆனால் ஒரு வித்தியாசம் அதிமுகவுக்கு பகிரங்க எதிர்ப்பு என்றால் திமுகவுக்கு மறைமுக எதிர்ப்பு... அவ்வளவுதான்!!
வலிய போகவில்லை
இதற்கு காரணம், இந்த கட்சி மீதும் ஊழல் கறை படிந்துள்ளது. இவர்களுடன் ஒட்டி உறவாடினால் அது தனது கொள்கைக்கு எதிரானதாகவே அமைந்துவிடும் என்பதால், கொஞ்சம் ஒதுங்கியே இருக்கிறார் கமல். அதனால்தான் கருணாநிதி சிலை திறப்பு விழா கலந்து கொள்ளாதது, இதுவரை கூட்டணி என்று தாமாக வலிந்து போய் இதுவரை பேசாமல் இருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம்
மூன்றாவது காரணம், மக்களிடம் உடனடியாக ரீச் ஆகிறார், அவர்களிடம் எளிதாக செல்கிறார், பேசுகிறார், இயல்பாக அணுகுகிறார். மக்கள் பிரச்சினைகளை உணர்ந்துள்ளார். மக்களைப் புரிந்துள்ளார். ரஜினி போல முரண்பட்டு நிற்கவில்லை. தமிழகத்தை நிலை குலை செய்த ஸ்டெர்லைட், கஜா புயல் என்று மிக முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து ஆராய்கிறார். மக்களை பாதிக்கக்கூடிய எந்த பிரச்சனையையும் மக்கள் நீதி மய்யம் துணிந்து களைந்து வருகிறது.
கிராம சபை
விவசாயிகளுக்கான ஆதரவை கமல் நன்றாகவே வெளிப்படுத்துகிறார். பல அரசியல்வாதிகள் செய்ய தயங்கும் கிராமய சபை என்ற விஷயத்தை ஆழமாக நம்பி, கிராமங்களுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இதுதான் கமலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்த்துள்ளது. இன்று கமலைப் பார்த்து திமுகவே கிராம சபையை கையில் எடுக்க ஆரம்பித்துள்ளது. எனவே இந்தியா டுடே கருத்து கணிப்பில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக கமலின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்றால், இவையெல்லாம்தான் அடிப்படை காரணமாக இருக்க முடியும்.
மண்ணின் மைந்தன்
அதாவது உலக நாயகனாக சினிமாவில் வலம் வந்தாலும், மக்களைப் பொறுத்தவரை உள்ளூருக்குத் தேவையான நாயகனாக கமல் மாறியுள்ளார். ஒட்டுமொத்தமாகவே கமல் யதார்த்தவாதியாக மட்டுமல்லாமல், மக்களின் மனதை ஆழமாக வேரூன்றி அலசி, அதன்படி அணுகுவதால்தான், மண்ணின் மைந்தனாகவும் அவர் இருப்பதுதான் காரணமாக இருக்க முடியும்.