ஜெயிக்காட்டியும் பரவாயில்லை.. ஆண்டவர் முடிவை வரவேற்கிறோம்.. மகிழ்ச்சியில் மய்யம்!
தனித்து போட்டி என்பதை வரவேற்பதாக மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: "ஆண்டவர் ஜெயிக்கலேன்னாலும் பரவாயில்லை.. தனித்து நிற்கும் அவரது முடிவை நாங்கள் வரவேற்கிறோம்" என்று மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.
ஊழல் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று கமல் சொல்லும்போதே அதிமுக, திமுக, அமமுக கிடையாது என்று ஓரளவு கணிக்கப்பட்டது. ஆனால் 40 தொகுதியிலும் போட்டி என்பது தமிழக மக்களுக்கே கொஞ்சம் ஷாக் தான்.
இதை பற்றி மய்யம் சம்பந்தப்பட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிய முற்பட்டோம். அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் இதுதான்:

கொள்கை பிடிப்பு
"இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஊழலுக்கு எதிரான கட்சி என்பதுதான் எங்களின் கொள்கையே. அந்த வகையில் எத்தனையோ முறை பல பேர் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்வந்தும், யாருடனும் கூட்டணி வைக்காமல் கொள்கை முடிவில் உறுதிப்பிடிப்போடு கமல் இருக்கிறார்.

வளர்ச்சிக்கு உதவும்
இப்படி தனித்து போட்டியிடுவதன் மூலம்தான் எங்கள் கட்சியின் முழு பலம் தெரியும். அரசியலில் எந்த இடத்தில் நாங்கள் நிற்கிறோம் என்பதை எங்களால் முழுமையாக அறிய முடியும். அது எங்களின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

ரசிகர்கள்
கமலின் ரசிகர்கள் எல்லா கட்சிகளிலும் கலந்தே உள்ளனர். ஒரு கட்சியில் இணைந்தால், மாற்று கட்சியில் உள்ள ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும். அதனால் கட்டிக் காத்து வரும் ரசிகர்களை கூட்டணி வைத்து பிரிக்கும் முயற்சியை அவர் விரும்பவில்லை.

தோளின் மீது சவாரியா?
40 தொகுதிகளில் 10, 15 இடம் கிடைத்தாலும் சரி, அது எங்களுக்கு பெருமைதான். இருக்கும் கட்சியிலேயே புதுக்கட்சி மக்கள் நீதி மய்யம்தான். அதனால் எடுத்தவுடன் எல்லா தொகுதிகளிலும் வெற்றி என்பது சாத்தியம் இல்லை என்பதும் எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு தொகுதியிலும் தகுதியான ஆட்களை நிறுத்தினால் மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வரும். "எங்கள் தோளில் சவாரி செய்ய எந்தவொரு கட்சியையும் அனுமதிக்க மாட்டோம்" என்று ஏற்கனவே கமல் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

நம்பிக்கை உள்ளது
அதேபோல, கிராம சபை கூட்டங்களை நடத்தியதில் மக்களின் மனதை நாங்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நிறைய சந்தர்ப்பங்களில் மக்களிடம் நெருங்கி பழகி உள்ளோம். அந்த வகையில் மக்கள் மீது எங்களுக்கு நிறையவே நம்பிக்கை உள்ளது. இதுவே உள்ளாட்சி தேர்தலை மட்டும் நடத்தியிருந்தால் இன்றைக்கு நிலைமையே வேறு. என்றாலும் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்துள்ளோம்.

கவலைப்பட மாட்டோம்
ஆனால் தனித்து போட்டி என்ற இந்த முடிவை கூட திரிக்க தொடங்கி விட்டார்கள். "பிரதமர் மோடி எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதற்காக, பாஜகவால் நியமிக்கப்பட்டவர் கமல் என்றும், இவர் கட்சி நடத்துவதற்கே பாஜகவிடம் இருந்துதான் பணம் வந்தது என்றும்" சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைக்க ஆசைப்பட்டதற்கே காங்கிரசுக்குள் கமல் "ஊடுருவுகிறார்" என்று சொன்னவர்கள் இவர்கள். அதனால் எங்கள் மீதான விமர்சனங்களை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டோம்.

வரவேற்கப்பட வேண்டியது
ஜாதி கட்சிகள், மதக்கட்சிகள், திராவிட கட்சிகள் போல் இல்லாமல், தனித்து போட்டி என்று சொல்லி, முழுக்க முழுக்க இளைஞர்களை நிறுத்தி வரப்போகும் தேர்தலை சந்திப்போம்" என்றனர். இவர்கள் சொல்வது முழுக்க முழுக்க சரியே. கமல்ஹாசன் தனித்து நின்றால்தான் அவரின் பலம் அவருக்கும், மற்றவர்களுக்கும் தெரிய வரும். இவர் வேற மாதிரி என்பதும் மக்களுக்குப் புரிய வரும். அந்த வகையில் கமலின் முடிவு வரவேற்கப்படக் கூடியதே.












Click it and Unblock the Notifications