கேப்டன் பாணியில் ம.நீ.ம. தலைவர் ப்ளஸ் பொதுச்செயலாளராக கமல்ஹாசன்- பழ. கருப்பையா, பொன்ராஜூக்கு பதவி!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பதவியுடன் பொதுச்செயலாளராகவும் நடிகர் கமல்ஹாசன் இருப்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் பெரும்பாலான 2-ம் கட்ட தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். கமல்ஹாசனின் வலது, இடதுகரங்களாக மக்கள் நீதி மய்யத்தில் செயல்பட பலரும் இப்போது இல்லை.

கமல்ஹாசன் காட்டம்
ஒட்டுமொத்தமாக மக்கள் நீதி மய்யம் கட்சி கலகலத்துப் போனது. கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீது கமல்ஹாசனும் காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.

பொதுச்செயலாளராக கூடுதல் பதவி
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் எஞ்சிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் அக்கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தலைவராக உள்ள கமல்ஹாசன் கூடுதலாக பொதுச்செயலாளர் பதவியையும் வகிப்பார்.

அரசியல் ஆலோசகர்கள்
மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ. கருப்பையா, பொன்.ராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பு துணைத் தலைவராக ஏஜி மெளரியா, களப்பணியின் துணைத் தலைவராக தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளனர்.

யார் யார் புதிய நிர்வாகிகள்?
தகவல் தொழில்நுட்பம், செய்தித் தொடர்பு மாநில செயலாளராக செந்தில் ஆறுமுகம் (சட்ட பஞ்சாயத்து இயக்கம்), கட்டமைப்பு செயலாளராக சிவ. இளங்கோ(சட்டப் பஞ்சாயத்து இயக்கம்), தலைமை நிலைய மாநில செயலாளராக சரத்பாபு, மத்திய நிர்வாக குழு உறுப்பினராக நடிகை ஶ்ரீபிரியா, நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளராக நாகராஜ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜயகாந்த் பாணி
தமிழகத்தில் பொதுவாக அரசியல் கட்சிகளில் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகள் வெவ்வேறு நபர்கள் வசம் இருக்கும். தேமுதிகவில் விஜயகாந்த், தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவியை வைத்துள்ளார். அதே பாணியில் கமல்ஹாசனும் தலைவர், பொதுச்செயலாளர் பதவியை தம் வசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications