எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றி வழிபட்டு அஞ்சலி செலுத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்தனர். பாலு எழுந்து வா என்று உருகி கூப்பிட்டார் இளையராஜா.
நோய் தொற்றில் இருந்து எஸ்.பி பாலசுப்ரமணியம் மீண்டாலும் அடுத்தடுத்து ஏற்பட்ட பாதிப்புகளால் 50 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தார். திடீர் என உடல் நலக்குறைவில் பின்னடைவு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் மரணமடைந்தார் எஸ்.பி பாலசுப்ரமணியம்.
அவரது மறைவு செய்தி கேட்டு லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பாலு எழுந்து வராமல் போய் விட்டாயா? கந்தர்வர்களுக்காக பாட போய் விட்டாயா என்று கேட்டு வீடியோ வெளியிட்டார் இளையராஜா.

எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் இன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அரசு காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார் எஸ் பி பாலசுப்ரமணியம். அவரது ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்து அனுப்பினர்.
இளையராஜா, எஸ்.பி பாலசுப்ரமணியம் இடையே பல ஆண்டுகால நட்பு உள்ளது. இந்த நட்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் ஆன்மா சாந்தியடையவும் இன்று இளையராஜா திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டு அஞ்சலி செலுத்தினார். இந்த புகைப்படம் இளையராஜாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இளையராஜா ஏற்கனவே ஜெயகாந்தன், எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் மரணமடைந்த போதும் இதுபோல் திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications