அடடா மழைடா "அடை" மழைடா.. 6 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மழை
Recommended Video
சென்னை: சென்னையில் 6 மாதங்களுக்கு பிறகு இன்றைய தினம் சில பகுதிகளில் மழை பெய்தது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கி விண்ணை முட்டி கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் மழை பெய்து 196 நாட்கள் ஆயிற்று. இதனால் கடும் வெப்பம் நிலவி வருகிறது. தகிக்கும் வெயிலால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஆஹா.. வந்துருச்சுய்யா.. சென்னையை முத்தமிட்ட முதல் மழை.. மண்மணத்தில் மயங்கிய மக்கள்!
மின்வெட்டு
அனல் கக்கும் வெயிலால் திறந்தவெளியில் வியாபாரம் செய்பவர்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் போதாகுறைக்கு தண்ணீர் பஞ்சமும், அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம்
இந்த நிலையில் இன்று முதல் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில் வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
மழை பெய்யும்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் வெப்பம் குறையும். இன்னும் 3, 4 நாட்களில் தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழைக்கான வாய்ப்புள்ளது. இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவித்திருந்தார்.
|
சென்னையில் மழை
இதனால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் இன்று காலை முதல் ஜில்லென்று காற்றும் சுட்டெரிக்கும் வெயிலுமாக மாறி மாறி வந்தன. இந்த நிலையில் பிற்பகல் 3 மணிக்கு மேல் சென்னையில் மழை பெய்தது. பெரிய அளவில் இல்லாவிட்டாலும் இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
கொண்டாட்டம்
சென்னையில் கிண்டி, வளசரவாக்கம், முகப்பேர், தாம்பரம், பல்லாவரம், போரூர், நசரத்பேட்டை, குரோம்பேட்டை, தரமணி, கோவிலம்பாக்கம், குன்றத்தூர், திருமழிசை, பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், காஞ்சிபுரம், மதுராந்தகம்.சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக 15 நிமிடங்களுக்கு மழை பெய்தது. சிறிய மழை என்றாலும் 6 மாதங்களுக்கு பிறகு கோடையில் பெய்யும் முதல் மழை என்பதாலும் வெப்பம் தணிந்ததாலும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அடை மழை பெய்தாதான் அடடா மழைடா பாட வேண்டுமா என்ன.. 196 நாட்கள் கழித்து கொஞ்சூண்டு மழை பெய்தாலும் பாடலாம் மக்களே!