காலையில் சுட்டெரித்த வெயில்..சென்னையில் திடீரென திரண்ட மேகங்கள்! இடி மின்னலுடன் கொட்டிய கனமழை
சென்னை: காலையில் இருந்தே சென்னையில் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகல் நேரத்தில் கருமேகங்கள் திரண்டு கனமழையாக கொட்டித்தீர்த்தது. அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூட மிதமான மழை பெய்து வருகிறது
சென்னையில் கடந்த வாரம் இயல்பை விட அதிக அளவில் மழை பொழிந்தது. பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. தமிழ்நாட்டின் கடந்த வாரம் மழை பெய்த நிலையில் இரு தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. வேலூர், மதுரை மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் வரை கொளுத்தியது. அக்னி வெயில் முடிந்த பின்னர் கூட வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. அதேபோல பருவமழையும் சற்று தாமதமாக தொடங்கியது.

இந்நிலையில் இன்றைய நிலவரத்தை பொறுத்த அளவில் தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
காலை நேரத்தில் சென்னையில் வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது. குளிர்ந்த காற்று வீசியது. இடி மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது.
சென்னையில் புறநகர் பகுதிகளான முகப்பேர், பூந்தமல்லி, வில்லிவாக்கம், ரெட்டேரி, மாதவரம் போன்ற பகுதிகளிலும், நகர் பகுதிகளான கோடம்பாக்கம், சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணாநகர் போன்ற இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications