தமிழகத்திற்கு 7 முறை வந்த பிரதமர் மோடி! ஒரு தொகுதியில் கூட வெற்றி முகம் இல்லையே!
சென்னை: தமிழகத்தில் பிரதமர் மோடி 7 முறை வந்த போதிலும் பாஜக வேட்பாளர்கள் யாருமே முன்னிலையில் இல்லாதது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் திமுக 22 இடங்களிலும் (கொமதேக -1) காங்கிரஸ் 9 இடங்களிலும் சிபிஐ, சிபிஎம், விசிக தலா இரு இடங்களிலும் மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டது.

அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக 33 இடங்களிலும் புதிய தமிழகம் 1 இடத்தில் (இரட்டை இலை சின்னத்தில்), தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிட்டது.
பாஜக கூட்டணி சார்பில் பாஜக 19 தொகுதிகளிலும் ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், சிவநேசன், பாரிவேந்தர் ஆகியோரின் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. பாமக 10 இடங்களிலும் தமாகா 3 இடங்களிலும் அமமுக 2 இடங்களிலும் சுயேச்சையாக ஓபிஎஸ் ஒரு இடத்திலும் போட்டியிட்டார்.
தமிழகத்தில் பாஜக திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது.
இதில் ஒரு தொகுதிகளில் கூட பாஜக முன்னிலையில் இல்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வந்தார். ஆனால் போக போக காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் உள்ளார். இவருக்கும் நயினாருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 50 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. இதனால் வெற்றி பெறுவது சிரமம் என்பதால் நயினார் நாகேந்திரன் பூத்தை விட்டே வெளியேறிவிட்டார்.
அது போல் கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், தென் சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன், மத்திய சென்னையில் வினோஜ் செல்வம், வடசென்னையில் பால் கனகராஜ், விருதுநகரில் ராதிகா, கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி கடந்த 3 மாதங்களில் 10 முறை தமிழகத்திற்கு வந்துவிட்டார் . கடைசியாக சென்னையில் நடந்த ரோடு ஷோவிற்காக ஏப்ரல் 10 ஆம் தேதி வருகை தந்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளோ மோடி 10 முறை தமிழகத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் பாஜக வெல்லாது என விமர்சித்தது. அத்துடன் சென்னையிலும் தென் தமிழகத்திலும் வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்ட போது வந்து பார்க்காத பிரதமர், தேர்தலுக்காக வந்துவிட்டார் என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு எத்தனையோ முறை பிரதமர் மோடி வந்த நிலையிலும் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாதது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications