‛‛3வது முறை பிரதமராக மோடி வேண்டாம்’’.. பாஜகவுக்கு பரிந்துரைத்த சு.சுவாமி.. அப்போ யாரு? தடாலடி
சென்னை: பாஜகவில் 3வது முறையாக பிரதமராக மோடி வேண்டாம் என அந்த கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல் என்பது கடந்த மாதம் 19ம் தேதி 102 தொகுதிகளுக்கு நடந்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது.

அதன்பிறகு 2வது கட்ட தேர்தல் என்பது கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. தற்போது வரை மொத்தம் 190 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு இன்னும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 3வது கட்ட தேர்தல் என்பது வரும் 7 ம் தேதி நடைபெற உள்ளது. கடைசி கட்ட தேர்தல் ஜுன் 1ல் முடிவடைந்து ஜுன் 4ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியை 3வது முறையாக பிரதமராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி வியூகங்களை வகுத்து பிரசாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் தான் சென்னை விமான நிலையத்தில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இந்த முறை மத்தியில் பிரதமராக மோடி அல்லாத பாஜகவை சேர்ந்த வேறு யாராவது பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறினார். அதாவது சுப்பிரமணியன் சுவாமியிடம் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛கடந்த 10 ஆண்டுகளாக பாஜக எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை. இதனால் தான் பாஜக தேர்தல் பிரசாரத்தில் வெறுப்பு பிரசாரம் செய்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறதே?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலளிக்கையில், ‛‛எனக்கு முதலிலேயே தெரியும். பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் வரவில்லை. பொருளாதார அறிவு உள்ளவர்களை மோடி சந்திக்கவில்லை. எல்லாம் எனக்கு தெரியும் என்ற பெருமையில் இருந்தார். அதேபோல் சீனா 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தியா எல்லைக்குள் வந்து ஆக்கிரமித்துள்ளனர். அதனை மறைத்து வைத்துள்ளனர். வெளிநாடுகளும் நமக்கு உதவியாக இல்லை. அமெரிக்காவும் நமக்கு எதிரியாக மாறிவிட்டது.
தற்போது பிரதமராக மோடிக்கு 2 முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னுடைய அபிப்பிராயப்படி மத்தியில் பிரதமராக மோடி அல்லாத பாஜகவை சேர்ந்த வேறு யாராவது பொறுப்பேற்க வேண்டும்'' என்றார். இருப்பினும் பிரதமர் மோடிக்கு பதில் பாஜகவில் எந்த தலைவரை பிரதமராக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடவில்லை.
பிரதமர் மோடிக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி கருத்து சொல்வது இது முதல் முறையல்ல. அவர் தொடர்ச்சியாக பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார். சமீபத்தில் கூட பிரதமர் மோடியை வாரணாசியில் இந்துக்கள் தோற்கடிக்க வேண்டும் எனக்கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications