அரசியலமைப்பை வடிவமைத்தவர் அம்பேத்கர்; தூக்கி வீசியவர் மோடி? - இது கார்த்தி சிதம்பரத்தின் ஒப்பீடு
சென்னை: அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கருடன் அதை தகர்த்த மோடியை இளையராஜா ஒப்பிட்டதே தவறு என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மோடியை இளையராஜா பாராட்டியதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ட்விட்டரில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகின.
திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், சினிமா பிரபலங்கள் போன்றோர் இளையராஜாவின் கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். மறுபக்கம் பாஜகவினர் இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரத்தின் ஒப்பீடு
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் "எனக்கு தனிப்பட்ட முறையில் இசையமைப்பாளர் இளையராஜவின் மீது பெரிய மரியாதை உள்ளது. ஆனால், மோடியை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கருடன் அவர் ஒப்பிட்டது முழுவதும் பொறுத்தமற்றது.
அரசியலமைப்பின் அனைத்து நெறிகளையும் தூக்கி எரிந்த ஒரு நபரை, அரசியலமைப்பை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றிய அறிஞரோடு ஒப்பிட்டுள்ளார். அம்பேத்கர் முன்வைத்த சமூக சீர்திருத்தங்கள், மோடி சமூகத்தில் பரப்பி நச்சு விஷத்துக்கு முரணானவை." எனக் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் புத்தக முன்னுரை
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயர் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில், "அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு
பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களே நினைவுக்கு வருகின்றன. குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தாலும் முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் மூலமாகவும் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்.
Recommended Video

இளைஞர்கள் புத்தகம் படிக்க வேண்டும்
அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி." என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications