நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: நடிகர் மோகன்லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 23 ஆம் தேதி நடைபெறும் 71வது தேசிய விருதுகள் விழாவில், அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் மோகன்லால். 1980 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான மோகன்லால் இன்று வரை தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். இந்திய திரைத்துறையில் ஒரே வருடத்தில் 34 படங்களை ரிலீஸ் செய்து அசத்தியவர் மோகன்லால். கடந்த 1986-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் 34 படங்கள் வெளியாகின. அதில் 25 படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவித்தன.

1980 ஆம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளியான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மோகன்லால். இதுவரை 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஹிருதயபூர்வம் படத்தில் நடித்திருந்தார். சத்யன் அந்திக்காடு இயக்கிய இப்படத்தில் இவருடன் மாளவிகா மோகனன், சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தையடுத்து, விருஷபா படத்தில் நடித்துள்ளார் மோகன்லால். நந்தா கிஷோர் இயக்கி இருக்கும் இப்படம் அடுத்த மாதம் 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நடிகர் மோகன்லால் இத்தனை ஆண்டுகாலம் நிலைத்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகராக இருந்து வரும் நிலையில் அவருக்கு மத்திய அரசு, தாதாசாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட உள்ள அறிவிப்பில், "தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், மோகன்லாலுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும்.
இந்திய சினிமாவுக்கு மோகன்லால் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக கவுரவிக்கப்படுகிறார். இந்த விருது வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications