ஆஹா.. "லீக்கான" பொன்னையன் ஆடியோ? இனிமேதான் எடப்பாடி முதுகில் குத்த போறாங்க! பற்ற வைத்த திமுக எம்பி!
சென்னை: அதிமுகவில் இனிமேல்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு துரோகங்கள் இழைக்கப்படும் என்று திமுக எம்பி செந்தில்குமார் எச்சரித்து உள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முதல்நாள் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இதை எதிர்த்து ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் விதிகளை மீறி செய்யப்பட்டுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டுள்ளது.

சட்ட மோதல்
அதிமுகவில் இதன் காரணமாக சட்ட ரீதியாக மோதல் ஏற்பட்டுள்ளது. இது போக இன்னொரு பக்கம் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கும் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுகவில் இப்படி பல்வேறு மோதல்கள் நடந்து வரும் நிலையில்தான் நேற்று பொன்னையன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றும் வெளியானது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்ததாக பொன்னையன் பேசிய ஆடியோ நேற்று இணையம் முழுக்க வைரலானது.

ஆடியோ
இந்த நிலையில், இந்த ஆடியோ முழுக்க முழுக்க பொய்யானது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் பொன்னையன் பேசியதாக கூறப்படும் இந்த ஆடியோ நேற்று வெளியானது. அதில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, தங்கமணிக்கு எதிராகவும் பொன்னையன் பேசுவதாகவும் ஆடியோவில் பதிவாகி உள்ளன.

என்ன சொன்னார்?
பதவியை காப்பாற்றிக்கொண்டால் போதும் என எடப்பாடி பழனிசாமி முட்டாள்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார். யாரும் கட்சிக்கு விஸ்வாசமாக இல்லை. சிவி சண்முகத்திடம் 19 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். கொங்கு மண்டபத்தில் கூட எடப்பாடி கையில் எம்எல்ஏக்கள் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. 9 எம்எல்ஏ க்களின் ஆதரவு மட்டுமே அவரிடம் உள்ளது, இதனால் எடப்பாடி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை.

எடப்பாடி
முதல்வர் பதவி வேண்டும் என்பதால் எடப்பாடி இப்படி ஓடிக்கொண்டு இருக்கிறார். கேபி முனுசாமியும் ஒற்றை தலைமைக்கு வர முயன்று கொண்டு இருக்கிறார். சிவி சண்முகம் பகலிலேயே குடிக்க கூடியவர், என்று பொன்னையன் பேசுவதாக இந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது. அதிமுகவில் இந்த ஆடியோ பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்த ஆடியோ முழுக்க முழுக்க பொய்யானது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார். பொன்னையன் அளித்துள்ள விளக்கத்தில், நான் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது. மிமிக்கிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யாக ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக எம்பி
இந்த நிலையில் அதிமுகவில் இனிமேல்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு துரோகங்கள் இழைக்கப்படும் என்று திமுக எம்பி செந்தில்குமார் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்விட்டில், நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் பல டிராமாக்கள் நடக்க போகிறது. வரும் நாட்களில், வரும் மாதங்களில் பழனிசாமிக்கு நெருக்கமானவர்களே அவரை மேலும் மேலும் முதுகில் குத்துவார்கள். வாழ்க்கை ஒரு வட்டம். எது மேலே செல்கிறதோ அது கண்டிப்பாக கீழே வரும். அதுதான் இயற்கையின் விதி, என்று செந்தில்குமார் எம்பி குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications