எல்லா சீக்ரெட்டும்.. வெளியே வந்துடும்! ஓபிஎஸ் "சைலன்ட்" எச்சரிக்கை! வெலவெலத்த ரத்தத்தின் ரத்தங்கள்
சென்னை: நேற்று அதிமுக ஒற்றை தலைமைக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் சில முக்கியமான தகவல்களை வெளியிட்டார். பல விஷயங்களை மனதில் வைத்துதான் ஓபிஎஸ் இவ்வளவு வெளிப்படையாக பேசினார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அவர் பேட்டியில் குறிப்பிட்ட சில விஷயங்களால் அதிமுக நிர்வாகிகள் பலர் அப்செட்டில் இருக்கிறார்களாம்..
அதிமுகவில் இரண்டு நாட்களுக்கு முன் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கிணறு வெட்ட போய் பூதம் கிளப்பிய கதையாக.. பொதுக்குழு குறித்து ஆலோசனை செய்ய கூட்டப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது.
ஒற்றை தலைமைக்கு அடிபோட்டு வந்த எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இந்த பொதுக்குழுவிலேயே பொதுச்செயலாளர் பதவியை பெற்றுவிட தீவிரமாக அவர் காய் நகர்த்தி வருகிறார்.

ஓபிஎஸ் கோபம்
ஆனால் அதிமுக கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றி நிர்வாகிகள் பேசியதை ஓபிஎஸ் சுத்தமாக விரும்பவில்லையாம். தனக்கு எப்படியும் ஒற்றை தலைமை எல்லாம் கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்ட அவர்.. இப்போ ஏன் ஒற்றை தலைமை எல்லாம்? நாம் ஆட்சியில் இருக்கிறோமா? எல்லாம் நன்றாகத்தானே போய்கொண்டு இருக்கிறது. எடப்பாடிக்கு கட்சியில் வாய்ஸ் இருக்கிறது தானே ஏன் இப்போது ஒற்றை தலைமை.. நான் இன்னும் எத்தனை காலத்திற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அதிமுக நிர்வாகிகளிடம் கூறி இருக்கிறாராம்.

சமாதானம்
ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்ய கடந்த 48 மணி நேரமாக எடப்பாடிக்கு நெருக்கமான நிர்வாகிகள் தீவிரமாக முயன்றனர். ஆர்பி உதயகுமார், காமராஜ் போன்ற நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை மூன்று முறை அதிகாரபூர்வமாக சந்தித்து பேசினார்கள். நீங்கள் பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுங்கள்.. உங்களின் இரண்டு மகனுக்கும் எல்லா தேர்தலிலும் சான்ஸ் தருகிறோம். நீங்கள் அவைத்தலைவர், பொருளாளர் இரண்டு பதவியையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று டீல் பேசி உள்ளனர். ஆனால் இதற்கு ஓபிஎஸ் மசியவில்லை என்று கூறப்படுகிறது.

பேட்டி
தன்னை எப்படியாவது சமாதானம் ஆக வைத்து.. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆகிவிடுவார் என்பதை உணர்ந்து கொண்ட நிலையில்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0வை தொடங்கி இருக்கிறார் என்கிறார்கள். நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் சில ரகசியங்களை பொது வெளியில் போட்டு உடைத்தார். அவர் தனது பேச்சில், ஒருங்கிணைப்பாளராகிய என்னிடம் கலந்து பேசாமல் மா.செ.க்கள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசினர். என்னிடம் சொல்லாமல் இந்த விவாதத்தை தொடங்கி உள்ளனர். மாதவரம் மூர்த்திதான் முதலில் இதை பற்றி பேசினார்.

மோடி
தொண்டர்களை காப்பாற்றத்தான் அதிமுகவில் இருந்து வருகிறேன். கட்சித் தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து இரட்டைத் தலைமையை ஏற்றுக்கொண்டேன். துணை முதல்வருக்கு அரசியல் சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை. பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன் , என்றார் ஓபிஎஸ். அதிமுக கூட்டத்தில் பேசியதை மட்டும் போட்டு உடைக்காமல் பிரதமர் மோடி நடத்திய பழைய சமாதான பேச்சுவார்த்தைகளை எல்லாம் கிளறி ஓபிஎஸ் வெளிப்படையாக பேசினார்.

உண்மைகளை உடைத்தார்
அதோடு, நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றைத் தலைமை குறித்து யாரிடமும் பேசியதே இல்லை. பொதுச்செயலாளர் பதவி தேவை என ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவர முடியாது. ஒருங்கிணைப்பாளருக்குதான் கையெழுத்திடும் அதிகாரம் என முதலில் என்னிடம் தெரிவித்து பின்னர் மீறினர். தற்காலிக ஏற்பாடாகவே பொதுச்செயலாளர் பதவியை அன்று சசிகலாவுக்கு கொடுத்தோம். சசிகலா விவகாரத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள்தான் முடிவு எடுப்பார்கள் என்று சசிகலா விவகாரங்களையும் ஓபிஎஸ் கிளறினார்.

மோடியை உள்ளே இழுத்தார்
சசிகலா பற்றி உண்மை, மோடி சமரசம் பேசினார் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து ஓ பன்னீர்செல்வம் பகிர் கிளப்பி இருக்கிறார். 2017ல் நடந்த விஷயங்களை எல்லாம் கிளறி அவர் இப்படி வெளிப்படையாக பேசியது அதிமுகவை மட்டுமின்றி பாஜகவையும் அப்செட் ஆக வைத்துள்ளது. இந்த நிலையில் பல விஷயங்களை மனதில் வைத்துதான் ஓபிஎஸ் இவ்வளவு வெளிப்படையாக பேசினார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமாவார்கள். அதாவது.. இது ஒரு மிரட்டல் மனோபாவம் என்கிறார்கள் அதிமுகவினர்.

மிரட்டல்
எனக்கு கட்சியில் நடந்த எல்லாம் தெரியும். சசிகலா, மோடி சமரசம் பற்றி எல்லாம் தெரியும். நீங்கள் என்னை ஓரம் கட்டினால்.. நான் காட்டிக்கொடுத்துவிடுவேன். கட்சி விவகாரங்களை வெளியே சொல்லி விடுவேன். எனக்கு எதிராக நீங்கள் செயல்பட்டால் எல்லாத்தையும் சொல்லி கட்சியை இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் விடுக்கும் சைலன்ட் எச்சரிக்கை இது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

எச்சரிக்கை
அதாவது தனக்கு எதிராக யாராவது செயல்பட்டால் பல விஷயங்களை உடைக்க போவதாக ஓபிஎஸ் இந்த பேட்டி மூலம் சிக்னல் கொடுத்துள்ளார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஓபிஎஸ் கொடுத்த இந்த பேட்டி அதிமுக வட்டாரத்தில் திகிலை கிளப்பி உள்ளது. அவர் பேசிய விஷயங்கள் பற்றி எடப்பாடி தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். நேற்று இரவு ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி இன்று காலையும் ஆலோசனை செய்தார். இன்றும் பல்வேறு மீட்டிங்குகளை அவர் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications