தமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இணை நோய் இல்லாத 84 பேர் உட்பட 311 கொரோனாவால் உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை காரணமாக வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் வரும் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை
ஊரடங்கு அறிவிப்பிற்குப் பிறகு மாநிலத்தில் வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளது. இருந்தாலும் முழுவதுமைாக கட்டுக்குள் வரவில்லை.
33 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 33,181 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 9 பேர் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பியவர்களாகும். அதேபோல மாநிலத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1264 பேர் 12 வயதுக்கு உட்பட சிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியாகும். அதேபோல தமிழ்நாட்டில் இன்று 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இணை நோய்கள் இல்லாத 84 பேர் உட்பட 311 பேர் கொரோனா உயிரிழந்துள்ளனர். அவர்களில் 163 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 148 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,670 ஆக உயர்ந்துள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,19,342ஆக அதிகரித்துள்ளது. மறுபுறம் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 21,317 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக தற்போது வரை 13,61,204 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 6247 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கோவையில் 3166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டில் 2041 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, திருவள்ளூர், திருச்சி ஆகிய மாநிலங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.