பிளஸ் 2 பொதுத்தேர்வு.. ஆங்கில பாடத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்
பிளஸ் 2 ஆங்கிலம் பொதுத்தேர்விலும் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற ஆங்கிலம் பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற தமிழ் பொதுத்தேர்தலில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கி ஏப்.3ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாள் மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,225 தேர்வு மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுத இருந்தனர்.

தமிழ் மொழித் தேர்வை எழுதாத மாணவர்கள்
அதில், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகளும் அடங்குவர். மொழித் தேர்வை 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவந்தது. இதன்படி, பள்ளி மாணவர்களில் 49,559 பேரும், தனித்தேர்வர்களில் 1,115 பேரும் தேர்வை எழுதவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மறுவாய்ப்பு?
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 5 சதவிகிதம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஆங்கிலத் தேர்வை எழுதாத மாணவர்கள்
தமிழ் மொழியை 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதாமல் இருந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசியல் கட்சிகளும் கவலை தெரிவித்திருந்தன. இந்த நிலையில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்விலும் தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உள்ளது.

உளவியல் கலந்தாய்வு
இதனால் தேர்வுக்கு வராத மாணவர்களின் பட்டியலை தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும் என்றும், அடுத்து வரும் துணை தேர்வுகளில் அம்மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications