தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, தமிழகத்தை காட்டிலும் அதிக தடுப்பூசிகள்
சென்னை :தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, தமிழகத்தை காட்டிலும் அதிக அளவில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருப்பது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவர தகவலில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் நிரந்த தீர்வு என்று நம்பப்படுகிறது. இதையடுத்து தடுப்பூசி உற்பத்தியை விரைவுபடுத்தி உள்ள மத்திய அரசு, பல்வேறு மாநிலங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தடுப்பூசியை அனுப்பி வருகிறது.
தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு, தமிழகத்தை காட்டிலும் அதிக அளவில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருப்பது மத்திய அரசு வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
மே 7ஆம் தேதி நிலவரப்படி எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, 7 கோடியே 62லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு, மே 7ஆம் தேதி வரை 72லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை காட்டிலும் குறைவான மக்கள் தொகைக் கொண்ட குஜராத்திற்கு, ஒரு கோடியே 39லட்சம் டோஸ்கள் அனுப்பி உள்ளது மத்திய அரசு.
சொந்த மக்கள் சாகும்போது.. வெளிநாட்டுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்தது ஏன்? ஜார்கண்ட் அமைச்சர் கேள்வி
இதே போல் 6 கோடியே 66 லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவிற்கு ஒரு கோடியே 6 லட்சம் தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதேநேரம் தமிழகத்தைக் காட்டிலும் சற்றே அதிகமாக மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு தமிழகத்தைக் காட்டிலும் இரு மடங்கு தடுப்பூசி டோஸ்கள் அனுப்பி உள்ளது மத்திய அரசு
நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 25.03லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை நாடு முழுவதும் 17.27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே 10ம் தேதி அன்று 10.75 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை போட்டுக்கொண்டுள்ளனர். 14.27 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்