போரூர் சரவணா ஸ்டோர்ஸில் கவரிங் நகை திருடியதாக தாய், மகள் கைது! சேலைக்குள் பேண்ட்!
சென்னை: சென்னை போரூர் சரவணா ஸ்டோர்ஸில் கவரிங் நகைகளைத் திருடியதாகத் தாய், மகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் தற்போது மூன்றாவது முறையாகச் சிக்கியுள்ளனர். கடந்த முறை ₹75,000 மதிப்பிலான கவரிங் நகைகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
சென்னை தி.நகரில் தொடங்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ், பல்வேறு இடங்களிலும் கிளைகளைத் தொடங்கியுள்ளது. உதாரணமாக, புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இதன் கிளைகள் உள்ளன.

இந்தக் கடைகளில் ஹேர்பின் முதல் தங்க நகை வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் இந்தக் கடைகளுக்கு வருகை தருகிறார்கள். மேலும், இங்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாங்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கடைகளில் ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு பிரிவிலும் பொருட்கள் நிறைந்திருக்கும். மேலும், சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட கடையில் தாயும் மகளும் மூன்றாவது முறையாகத் திருடிச் சிக்கியுள்ளனர்.
ஆம்! போரூரில் சரவணா ஸ்டோர்ஸ் கடை உள்ளது. இங்கு 6-ஆவது மாடியில் கவரிங் நகைகள் விற்கப்படுகின்றன. இங்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வந்த இரு பெண்கள், கவரிங் நகைகளைப் பார்ப்பதுபோல் ஊழியர்களின் கவனத்தைத் திசைத் திருப்பி, வளையல், நெக்லஸ், தோடு, ஆரம் உள்ளிட்ட கவரிங் நகைகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
இருவரும் சேலை அணிந்திருந்தனர். உள்ளே பேண்ட்டும் அணிந்திருந்தார்களாம். அந்தப் பேண்ட்டுக்குள்தான் நகைகளை மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்காணிப்பு கேமரா வழியாக மேற்பார்வையாளர் செல்லப்பாண்டி பார்த்துவிட்டார்.
உடனே அவர் ஊழியர்களுடன் சென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இருவரும் திருடவில்லை என மறுத்தனர். பின்னர் பெண் ஊழியர்களை வைத்து அவர்களைச் சோதனை செய்தபோது, ₹30,000 மதிப்பிலான கவரிங் நகைகளைத் திருடியிருந்தனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நகைகளைப் பறிமுதல் செய்த கடை நிர்வாகம், இருவரையும் போரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தது. விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுவாதி (54) மற்றும் அவரது மகள் சொர்ணா (35) என்பதும் தெரியவந்தது.

இருவரும் ராமாபுரத்தில் தங்கியிருந்ததாகத் தெரிவித்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் ஏற்கெனவே இதேபோல் திருட முயன்றபோது கடை நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்களாம். இவர்களது புகைப்படங்களை ஏற்கெனவே கணினியில் பதிவு செய்து வைத்திருந்தார்களாம். இதனால் கண்காணிப்பு கேமரா மூலம் எளிதாகச் சிக்கிவிட்டனர். கவரிங் நகைகளைத் திருடி, இவர்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டுப் பிழைத்து வந்தார்களாம்.
அத்துடன், அவற்றைத் தங்க நகை என அடகு வைத்துப் பணம் பெற முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே ₹75,000 மதிப்புள்ள கவரிங் நகைகளைத் திருடிச் சிக்கிய நிலையில், தற்போது ₹30,000 மதிப்புள்ள கவரிங் நகைகளைத் திருடியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications