"நானும் பாப்பாவும் போறோம்".. தற்கொலை செய்த வேளச்சேரி கர்ப்பிணி வழக்கு.. மாமியார் அதிரடி கைது
சென்னை: சென்னை வேளச்சேரியில் தனது சாவுக்கு மாமியார் சாந்திதான் காரணம் என ஆடியோ வெளியிட்டுவிட்டு 4 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (25). இவருக்கும் தி.நகரை சேர்ந்த குமரன் (37) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆன முதல் நாளிலிருந்து இந்துமதியின் மாமியார் சாந்தி, புதுப்பெண் என்றும் பாராமல் அவ்வப்போது திட்டியதாக தெரிகிறது. அந்த பெண்ணை ராசியில்லாதவள் என்றும் கரித்து கொட்டியது தெரியவந்தது.

அதிகம் படிக்கவில்லை
மேலும் இந்துமதி அதிகம் படிக்கவில்லை என தெரிகிறது. கர்ப்பிணிகள் நல்ல சத்தான உணவை நிறைய சாப்பிட வேண்டும் என்றுதான் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால் இந்துமதியின் மாமியார் சாந்தியோ, இந்துமதி 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் "அதிகம் படிக்காத உனக்கு எதுக்கு இவ்ளோ சாப்பாடு, குறைவாக சாப்பிடு" என கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இது போல் தொடர்ந்து தனது மாமியார் தொல்லை கொடுத்து வந்ததால் இந்துமதி வேளச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

4 மாத கர்ப்பிணி
தனது மனைவி தன்னை விட்டு பிரிந்த போதிலும், அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் இந்துமதியை தனது மாமனார் வீட்டுக்கு போய் சமாதானம் செய்து குமரன் அழைத்து வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குமரனும் அவரது தாயின் பேச்சை கேட்டுக் கொண்டு இந்துமதியை அழைக்காமல் இருந்துள்ளதாக தெரிகிறது.

மன உளைச்சல்
இதனால் இந்துமதிக்கு அதிக மனஉளைச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் தன்னை தொட்டு தாலி கட்டி குடும்பம் நடத்தி, கர்ப்பிணியாக்கிய தனது கணவரும் தன்னை கைவிட்டுவிட்டதால் இனி என்ன செய்வது என கவலைப்பட்டுக் கொண்டே இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்தான் தாய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்யும் முடிவை இந்துமதி எடுத்துள்ளார்.

கர்ப்பிணி தற்கொலை
அதற்கு முன்பு தனது சாவுக்கு காரணம் யார் என்பதை வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆடியோ மெசேஜை தனது மூத்த சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அதில் "என் சாவுக்கு குமரனின் அம்மாதான் காரணம், நானும் பாப்பாவும் செல்கிறோம்" என்று கண்ணீருடன் தெரிவித்துவிட்டு இந்துமதி கடந்த ஜூலை 24 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாமியார் கைது
இந்த மெசேஜை கேட்டுவிட்டு பதறியடித்துக் கொண்டு மூத்த சகோதரி தனது தாய் வீட்டுக்கு வருவதற்குள் இந்துமதி தூக்கிட்டு இறந்துவிட்டார். தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீஸார் இந்துமதியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 5 மாதங்களே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட்டது. இதில் இந்துமதியை தற்கொலைக்கு தூண்டியது மாமியார் சாந்தி என தெரியவந்தது. இதையடுத்து சாந்தியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications