இறந்த 7 வயது மகனின் சடலத்துடன் 3 நாள் வசித்த தாய்.. சென்னை திருநின்றவூரில் அதிர்ச்சி
சென்னை: சென்னை திருநின்றவூரில் இறந்த 7 வயது மகனுடன் அவரது தாய் 3 நாட்கள் வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூர் சிடிஎச் சாலையில் சரஸ்வதி என்ற ரேவதி வசித்து வருகிறார். ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது கணவர் ஜீவானந்தமிடமிருந்து பிரிந்து தனது 7 வயது மகன் சாமுவேலுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் தனது மகன் சாமுவேல் பசி, பட்டினியால் இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சரஸ்வதி தகவல் அளித்தார்.

காவல் நிலையம்
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநின்றவூர் காவல் துறையினர் சரஸ்வதி வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அதில் 7 வயது சிறுவன் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சடலம்
தொடர்ந்து சிறுவனின் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிர் இழந்து 3 தினங்களுக்கு மேல் ஆன நிலையில் எந்த தகவலையும் சொல்லாமல் அவரது தாய் சிறுவனின் உடலுடனே வசித்து வந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன்
உண்மையில் சிறுவன் பசியால் உயிர் இழந்தானா அல்லது சரஸ்வதியே கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

தாயின் நடவடிக்கை
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் கடந்த 3 தினங்களாக தாயின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் இருந்ததா என்பது குறித்தும் போலீஸார் அக்கம்பக்கத்தாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த 7 வயது மகனின் சடலத்துடன் 3 நாட்கள் தாய் வசித்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications