"அவனுக்கு 7 வயது தான் ஆச்சு.. இப்போ அம்மானு கூப்பிடக் கூட யாருமில்லை!" மருத்துவமனையில் கதறிய தாயார்
சென்னை: ஆழ்வார் திருநகரில் மகனை இழந்த துக்கத்தில் மருத்துவமனை வளாகத்திலேயே தாய் ஜெனிபர் கதறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது.
Recommended Video
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இவரது மகன் தீக்சித் ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் தீக்சித் பள்ளி பேருந்தில் பள்ளிக்குச் சென்றுள்ளார். மாணவர் வீட்டில் இருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே, அவரது தாயாரைத் தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகம் மாணவருக்கு விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

விபத்து
பேருந்தில் தீக்சித் ஏதோ ஒரு பொருளைத் தவறிவிட்டதாகவும் அதை எடுக்க மீண்டும் பேருந்தில் ஏற முயன்ற போது, தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த தீக்சித்தை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

உடலை வாங்கினர்
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்தனர். இருப்பினும், பள்ளியின் தாளாளரைக் கைது செய்யும் வரை, உயிரிழந்த மாணவர் தீக்சித் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னரே, மாணவர் தீக்சித் உடலைப் பெற்றோர் வாங்கச் சம்மதம் தெரிவித்தனர். நாளை 11 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 நிமிடம் தான்
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் தீக்சித்தின் தாய் , "பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் தனது ஒரே மகனைப் பறிகொடுத்து உள்ளேன். பள்ளி நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இன்று காலை 8: 30க்கு மணிக்குப் பள்ளிக்குக் குழந்தையை அனுப்பினேன். அடுத்த 10ஆவது நிமிடத்தில் 8 :40 பள்ளியிலிருந்து மகனுக்கு விபத்து ஏற்பட்டதாக ஃபோன் செய்து கூறினார்கள்.

அவனுக்கு 7 வயது தான்
முதலில் ஒரு மருத்துவமனைக்குச் செல்லச் சொன்னார்கள். அங்குச் சென்றால், உடல்நிலை மோசமாக உள்ளதாகக் கூறி மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லச் சொன்னார்கள். அங்குப் போவதற்குள் என் மகன் உயிரிழந்துவிட்டான். மருத்துவமனைக்குச் சென்று குழந்தையைப் பார்க்கையில் வாய், மூக்கு, உடல் முழுக்க ரத்தமாக இருந்தது. அவனுக்கு ஏழு வயது தான் ஆகிறது. என்ன நடந்தது என்று பள்ளி தரப்பில் இதுவரை ஒருவர் கூடச் சொல்லவில்லை.

பள்ளி தாளாளரைக் கைது செய்யணும்
உணவு கூடையை விட்டுச் சென்றதாகவும், தவறி விழுந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் என் குழந்தையின் வயிற்றில் பள்ளி வாகனம் ஏறி இறங்கி உள்ளது. பள்ளி வளாகத்தில், பள்ளி வாகனம் ஏறி என் மகன் இறந்துள்ளான். இப்போது டிரைவரை கைது செய்துள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், பள்ளி தாளாளரை இந்த விவகாரத்தில் கைது செய்ய வேண்டும். அம்மா என்று கூப்பிடக் கூட குழந்தை இல்லை.

என்ன நடக்கும்னு தெரியும்
இப்போது நான் விட்டுவிட்டால் என்ன நடக்கும் என எனக்குத் தெரியும். தளாரரை விட்டுவிடுவார்கள். 64 வயதான ஓட்டுநரை கைது செய்து என்ன பிரயோஜனம். அந்த பள்ளி தாளாளரைக் கைது செய்ய வேண்டும்" என்று கூறி கதறி அழுதார். மகனை இழந்த துக்கத்தில் மருத்துவமனை வளாகத்திலேயே தாய் ஜெனிபர் கதறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது.












Click it and Unblock the Notifications