அன்னையர் தினம்..மாத்ரு தேவோ பவ.. அம்மாவின் மனம் குளிர்ந்தால் வாழ்க்கை மலரும்..தோஷம் நீங்க பரிகாரம்
சென்னை: நமக்காக இரவும் பகலும் அயராது உழைக்கும் அம்மாவிற்கு தினம் தினம் விழா எடுக்கலாம். அதை விடுத்து மே மாதம் 2வது ஞாயிறு அன்று ஒரு நாள் மட்டுமே அன்னையர் தினம் கொண்டாடி வருகின்றனர். அன்னையர் தினம் கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் ஜோதிடத்தில் சந்திரனுக்கும் அம்மாவிற்கும் உள்ள தொடர்பு, பிள்ளைகளுக்கும் அம்மாவிற்கும் ஏற்படும் உறவு பற்றி அறிந்து கொள்வோம்.
ஒருவரின் ஜாதகத்தில் 4ஆம் வீடு சுக ஸ்தானம். இந்த இடம் தாயாரையும் குறிக்கிறது. அம்மா என்றாலே சுகமும் சந்தோஷமும்தானே. சந்திரனும் தாயாருக்குக் காரகம் வகிப்பவர்தான். குளிர்ச்சியை தரக்கூடிய சந்திரனும் தாயாருக்குக் காரகம் வகிப்பவர்தான். 4ஆம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்து, சந்திரனும் சுபர்களின் சம்மந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய தாயார் அமைவார் எனக் கூறலாம். இந்த பாவம் கெட்டால் அம்மாவின் உடல் நிலை பாதிக்கப்படும்.

ஜாதகத்தில் நான்காம் வீடு பற்றி தாயார், தாய்வழி உறவுகள், பிறந்த இடம், வாழ்விடம், வசிப்பிடம், குடும்ப வரலாறு, வீட்டில் இன்பம், உறவுகளுடன் உள்ள பந்தபாசம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த வீட்டில் இருந்து அறியப்படுகிறது. நான்காம் இடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள், பார்க்கும் கிரகங்களைப் பொறுத்து தாயின் உடல்நிலை, உறவு நிலை எப்படி அமையும் என்று பார்க்கலாம்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் தாயாரை குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரன் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில்ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும். சந்திரன் பகை வீட்டிலோ அல்லது பாவிகளுடனோ 6,8,12 ஆமதிபதிகளுடனோ தொடர்பில் இருக்கக்கூடாது. நீசமடைந்திருக்கக்கூடாது. அப்படி நீசமடைந்தாலும் நீசம் பங்கமடைந்திருக்க வேண்டியது அவசியம்.
ஒரு குழந்தை வளர்ந்து ஆளாகின்ற வரை, அதாவது பதினான்கு வயது வரை தாய் முக்கியம். பெண் குழந்தையாக இருந்தால் அதி முக்கியம். அதனால்தான் முதல் கேந்திர வீடாக தாய் வீடு அமைந்துள்ளது. குழந்தைப் பருவம் எந்த பிரச்சினையும் இன்றி நன்றாக இருக்க வேண்டும் என்றால் நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.
அம்மாவின் மனம் குளிரும் வகையில் செயல்களை செய்ய வேண்டும். அம்மாவின் மனதை வேதனையடையச் செய்தால் மாத்ரு தோஷம் உண்டாகும். எனவே பெற்ற தாய் உயிருடன் இருக்கும்வரை சந்தோஷமாக இருக்க செய்வது. இறந்தபின் பித்ரு கடன்களை சரிவர செய்வது அவசியம்.
பிறந்த ஜாதகத்தில் சந்திரன் சரியில்லாமல் இருப்பவர்கள் சந்திர தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மாவிற்கு பணிவிடை செய்வதோடு சந்திரன் பரிகார ஸ்தலமான திங்களுர், திருப்பதி, குணசீலம் போன்ற கோயில்களுக்கு சென்று வணங்கிவருவது. திருச்சி மலைகோட்டை தாயுமானசுவாமியை முக்கிய தினங்களிலும் சந்திரன் ஆதிக்கம் பெற்ற தினங்களிலும் தரிசித்து வணங்குவதால் தோஷம் நீங்கும்.
சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு திங்கள் கிழமை திருப்பதி சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்
ஒரு சிலருக்கு அம்மா உயிரோடு இருந்த வரைக்கும் அவருடைய அருமை தெரியாது. அம்மா மறைந்த பிறகுதான் அவருடைய அருமையும் அரவணைப்பும் புரியும். எனவே அம்மாவை பாசத்தோடும் நேசத்தோடும் பராமரித்தால் தினம் தினம் அன்னையர் தினம்தான்.












Click it and Unblock the Notifications