மனதில் ஒரு சொல்ல முடியாத உணர்வு.. அகமதாபாத் விமான விபத்தை முன்கூட்டியே அறிந்து தப்பிய பயணி?
சென்னை: இயற்கை சில சமயம் நம்மிடம் பேசும் விதம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா-171 விமான விபத்து, பலரது உயிரை பறித்தது. ஆனால், அதே நேரத்தில், சிலர் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அதிசய அனுபவத்தை சந்தித்துள்ளனர்.
இங்கிலாந்தில் பணிபுரியும் வதோதராவைச் சேர்ந்த வியாஸ், இரண்டு வருடங்களுக்கு பிறகு குடும்பத்தை சந்தித்து, லண்டனுக்கு திரும்ப தயாராக இருந்தார். புறப்படுவதற்கு முன் பெற்றோரிடம் ஆசிபெற சென்றபோது, அவரது தாயார், "இன்னும் சில நாட்கள் இருந்துவிட்டுப் போடா கண்ணா," என்று உணர்ச்சிவசப்பட்டு கேட்டுக்கொண்டார். அந்த வார்த்தைகள் வியாஸின் மனதை தொட்டது. பெற்றோரின் ஆசையை மதித்து, அவர் தனது விமான டிக்கெட்டை ரத்து செய்தார். அன்று மதியம் விமான விபத்து செய்தி வந்தபோது, தாயின் உள்ளுணர்வும், தந்தையின் ஆசியும் தனது உயிரைக் காப்பாற்றியதை உணர்ந்து கண்கலங்கினார்.

தந்தையின் உள்ளுணர்வு
நிகோலை சேர்ந்த சவ்ஜி டிம்பாடியா, லண்டனில் வசிக்கும் மகனை பார்க்க கிளம்ப தயாராக இருந்தார். ஆனால், அந்த நாள் அதிகாலை, "இன்று விமானத்தில் பயணிக்க மனது சரியில்லை" என்று திடீரென மகனிடம் தெரிவித்தார். காரணம் என்னவென்று கேட்டபோது, "ஒருவித மன அமைதியின்மை, சொல்ல முடியாத உணர்வு" என்று பதிலளித்தார். பிற்பாடு விபத்து செய்தி வந்தபோது, "நான் கும்பிடும் சுவாமி நாராயணன் என் உயிரைக் காப்பாற்றினார்," என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
உயிரை காப்பாற்றிய டிராபிக் ஜாம்
பூமி சவுகான், விடுமுறைக்கு பிறகு லண்டனில் உள்ள கணவரை பார்க்கத் திரும்பி சென்று கொண்டிருந்தார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி, போர்டிங் கேட்டு மூடிய பத்து நிமிடங்களுக்கு பிறகு விமான நிலையத்தை அடைந்தார். விமானத்தில் ஏற அனுமதி கேட்டும், அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினார். பின்னர் விபத்து செய்தி வந்தபோது, "என்னை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி! என் மகனை இந்தியாவில் விட்டுச் சென்றிருந்தேன். இது நான் கும்பிடும், விநாயகரான, கணபதி பாப்பாவின் அருள்!" என பூரிப்புடன் கூறினார்.
ஆவணப் பிழை உயிரைக் காப்பாற்றியது!
லண்டனில் உள்ள நண்பரை சந்திக்க அகமதாபாத் விமான நிலையம் வந்த ஜெயமின் படேல் மற்றும் பிரியா படேல் ஆகிய இருவரும், தங்கள் ஆவணங்களில் இருந்த குறைபாடுகளால் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. எவ்வளவு கெஞ்சியும், ஏர் இந்தியா ஊழியர்கள் விதிமுறைகளை கடைபிடித்து அனுமதி மறுத்தனர். ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய ஒரு மணி நேரத்தில் விபத்து செய்தி வந்தபோது, அதிர்ச்சியில் உறைந்தனர். "கடவுளுக்கும், எங்களை விமானத்தில் ஏற விடாத ஊழியர்களுக்கும் நன்றி!" என்று ஜெயமின் கூறினார்.
வாழ்க்கையில் சில நேரம், தாயின் பாசம், தந்தையின் உள்ளுணர்வு, விதியின் விளையாட்டு, அல்லது ஒரு சாதாரண தாமதம் கூட உயிரைக் காப்பாற்றும் அதிசயமாக மாறுகிறது. அகமதாபாத் விமான விபத்தில் இருந்து தப்பியவர்களின் கதைகள், அதற்கான உயிரோட்டமான சாட்சி!












Click it and Unblock the Notifications