அழகான பைக்குகள்.. ஆசை யாரை விட்டது.. விருகம்பாக்கம் போலீஸ் 3 பேர்.. சிக்க வைத்த சிசிடிவி
சென்னை: சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குகளுக்காக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் காணாமல் போயின. இந்த விவகாரத்தில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையம் வடபழனி, வளரசவாக்கம் பகுதிகளுக்கு முக்கியமான காவல் நிலையம் ஆகும். இங்கு பணியாற்றும் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்வார்கள். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் வாகனங்களையும் பறிமுதல் செய்வார்கள்.

அப்படி விருகம்பாக்கம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தை ஒட்டிய வளாகம் மற்றும் அதனை ஒட்டிய சாலையோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.இப்படி பறிமுதல் செய்த வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனால் சென்னை மேற்கு இணை போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனங்களை தற்காலிகமாக விருகம்பாக்கம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காலி மைதானத்துக்கு வேன் மூலம் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்கள்.
அதன்பிறகு கணக்கெடுப்பு நடத்தியபோது, போலீஸ் நிலையத்தில் இருந்த வாகனங்களின் எண்ணிக்கையைவிட தற்காலிகமாக மைதானத்தில் இறக்கி வைக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அந்த வாகனங்களை இடமாற்றம் செய்த போலீசாரிடம் கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுத்திருக்கிறார்கள்
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஜெகன், மணி, சத்யபிரபு ஆகிய 3 காவலரக்ள், வழக்குகளில் பறிமுதலான விலை உயர்ந்த 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் விலை உயர்ந்த கியர் சைக்கிள் ஆகியவற்றை வாகனம் மூலம் கொண்டு சென்று தங்களுக்கு தெரிந்த மெக்கானிக் கடையில் இறக்கி வைத்தது தெரிந்தது.
இது தொடர்பாக மெக்கானிக் கடை உரிமையாளர், ஊழியர்களிடம் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது. போலீசார் தங்களது கடையில் அந்த வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு சென்றதாக கூறினார்கள். இதையடுத்து உயர்அதிகாரிகளுக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து போலீஸ்காரர்கள் 3 பேரிடமும் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை வாகனங்கள் மூலம் எடுத்து சென்று மெக்கானிக் கடையில் நிறுத்தியது உறுதியானது. இதையடுத்து போலீஸ்காரர்கள் ஜெகன், மணி, சத்ய பிரபு ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கோயம்பேடு துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications