'1,000 ரூபாயா' நெஞ்சில் அடித்து சென்னை டிராபிக் போலீசிடம் வாக்குவாதம் செய்த நபர்! கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த நபர் ஹெல்மெட் போடாததால் அந்த நபருக்கு போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்தனர். ஆயிரம் ரூபாயை நான் எப்படி கொடுப்பேன், என்னிடம் ஆயிரம் ரூபாய் இல்லவே இல்லை என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அந்த நபர் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக போக்குவரத்து விதிமீறல்களே அமைகின்றன. இதனால், வாகன ஓட்டிகளில் விதிமீறல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக போக்குவரத்து போலீசார் முக்கிய சந்திப்புகளில் நின்று வாகன தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம்.

தற்போது மோட்டார் வாகன புதிய சட்டத்தின் படி, விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கடுமையாக விதிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. ஹெல்மெட் அணியாத பட்சத்தில் நபர் ஒருவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1,000, மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை மடக்கி பிடிக்கும் போலீசர், ஸ்பாட்டிலேயே ஃபைன் அடிக்கிறார்கள்.
இதனால் சில நேரங்களில் விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருடன் வாக்கு வாதம் செய்யும் சம்பவமும் நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் பைக்கில் வந்த நபர் இரண்டு பேரில் பின்னால் அமர்ந்து வந்தவர் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். இதனால் அந்த நபரை மடக்கி பிடித்து போக்குவரத்து போலீசார் அபாராதம் விதித்தனர்.

ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக போலீசார் கூறியதும், அதிர்ச்சி அடைந்த அந்த நபர்.. நெஞ்சில் அடித்துக்கொண்டு என் ஒரு நாள் சம்பளம் என கூச்சல் என போட்டார். நான் எப்படி ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியும் என புலம்பிக்கொண்டே இருந்தார். தொடர்ந்து ஆயிரம் ரூபாய் கட்ட என்னிடம் பணம் இல்லை என போக்குவரத்து போலீசாரிடம் அவர் வாக்கு வாதம் செய்தார். சாலையில் நின்ற வாகன ஓட்டிகளும் இதை வேடிக்கை பார்க்க தொடங்கினர்.
ஹெல்மெட் போடாமல் வந்ததற்கு அரசு விதிகளின் படி, ஆயிரம் ரூபாய் உங்களுக்கு அபராதம் போடப்பட்டுள்ளது என போலீசார் எடுத்துக் கூறிய போதும்.. அந்த நபர் அதகளம் செய்தார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில், தனது தவறை உணர்ந்த அந்த வாகன ஓட்டி, தான் செய்தது தவறுதன் என்றும், தன்னிடம் ஆயிரம் ரூபாய் இல்லாததால் ஆதங்கத்தில் அவ்வாறு பேசிவிட்டேன். எனக் கூறி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு சென்றார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications